Tuesday, September 1, 2009

காக்டெயில்



ஜூலை 10 அன்று, மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் இன்டியானா மாநிலத்தில் உள்ள அவர் பிற‌ந்த ஊரான கேரியில் ஒரு நினைவு சின்னம் வைத்தது, நம்ம ஊர் ஆள் செந்தில் முருகானந்தம்.

மைக்கேல் ஜாக்சனை மானசீக குருவாக நினைக்கும், பிரபு தேவாவே, உருகி உருகி நயனை லவ்விக் கொண்டிருக்கிறார். அன்றாடம், உதவி வேண்டி பல்லாயிர கண‌க்கான நம்ம ஊர் மக்கள் ஏங்கி நின்று கொண்டிருக்கும் போது, அவர்களுக்கெல்லாம் உதவாமல், ஜாக்சனுக்கு நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று செந்திலுக்கு என்ன வந்தது?

விசயம் இது தான். இவர் அமெரிக்காவில் வைத்திருக்கும் "ஸ்டோன் பிளான்ஸ்" என்ற கம்பெனி, கல்லறைக்கு, மற்ற பல விசயங்களுக்கு, கல் தோண்டி, டிசைன் செய்து, பதித்து கொடுப்பது வரை எல்லாவற்றையும் செய்யும். இனி சாக போகும் பல்லாயிர கண‌க்கான ஜாக்சன் ரசிகர்களில் கொஞ்சம் பேராவது இவர்களுக்கு ஆர்டர் கொடுத்தால், இவருக்கு நன்றாக கல்லா கட்டும், அதான்.

மார்கெட்டிங் உத்தியில் நம்ம ஆட்களும் முன்னெறிவிட்டார்கள் என் பெருமை பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

உலகின் மிக சிறந்த இசை கலைஞ‌னுக்கு என்னாலான அஞ்சலி என கண்கலங்கி விகடனில் அளித்த பேட்டியை படித்த போது, சகிக்கமுடியவில்லை, சிரிப்புத்தான் வந்தது.

*************************************************************************************

100 வயது ஆரோக்கியமாக வாழ்வதற்கான மந்திரம் என்ன?

100 + 100 = 100 தான். அதாவது, உடலை வழுபடுத்த 100 மணிநேர உடற்பயிற்சி, மனதை வழுபடுத்த 100 மணிநேர யோகா, ஒவ்வொரு வருடமும் இதை தொடர்ந்தால், 100 வயதுக்கு வாய்ப்பு அதிகம், மண்லாரியில் சிக்காத வரை.

டிவியில் ஏதோ காலை நிகழ்ச்சியில் பார்த்ததாக, பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.

*************************************************************************************

நண்பர் காரைக்குடிகாரர். நான் வெஜ் பிரியர். சிக்கன் ஐட்டம் என்றால், வெட்டுவெட்டு என வெட்டுவார். அவரை பார்த்து இன்னோரு வெஜிடேரியன் நண்பர் சொல்லியிருக்கிறார்,

"நீ செத்து நரகத்துக்கு போனதும், உன்னால செத்த கோழிகளையெல்லாம் விட்டு உன்னை கொத்த விடுவாங்க பாரு...."

அதுக்கு நண்பர் சொன்ன பதில்,

"அதெல்லாம் நடக்காது மச்சி, அடடா, இங்கயும் வந்துட்டானான்னு, கோழிங்க எல்லாம் தெரிச்சு ஓடும்"

இதை கேட்ட நான் நண்பரிடம் சொன்னேன்,

"இது ரெண்டுமே நடக்காது, ஏன்னா, நீ நரகத்துல படுற அவஸ்தையை, சொர்கத்திலிருந்து கோழிங்க எல்லாம் பார்த்து ரசிக்கும்"

*************************************************************************************

Friday, August 28, 2009

சர்தார்ஜி ‍ஜோக்ஸ் - 1



வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் ஒரு காட்சி, அதிக பரோட்டா தின்னும் போட்டி. இது நான் பல‌ வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த, ஒரு சர்தார்ஜியின் ஜோக்கிலிருந்து உருவப்பட்டது, ஆனாலும் மக்களால் ரசிக்கும் படி இருந்தது. ஸோ, மக்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சேவை, நான் ரசித்த சில சர்தார்ஜியின் ஜோக்குகளை பகிர்ந்துகிரலாம்ன்னு... கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜோக்குகள் தொடரும்.

ஒரு நாள் ஒரு ல‌ண்ட‌ன் பீச்சில் நம்ம சர்தார்ஜி படுத்துக் கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். சர்தார்ஜியை கடந்து போன ஒருவ‌ர் நம்மாளை பார்த்து கேட்டார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.

கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,

"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"

கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".

சே, இந்த‌ இட‌மே ச‌ரியில்லை, 'ஒரே தொல்லையாக‌ இருக்கு'ன்னு த‌ன‌க்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற‌ இட‌த்துல‌ போய் ப‌டுக்க‌லாம்ன்னு சர்தார்ஜி கிள‌ம்பினார். போகும் வ‌ழியில் இன்னோரு சர்தார்ஜி ப‌டுத்துக்கொண்டிருப்ப‌தை பார்த்தார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த‌ முறை கேள்வி கேட்டது, ந‌‌‌ம்ம‌ சர்தார்ஜி.

"யா..." ப‌டுத்துக்கொண்டிருந்த‌ சர்தார்ஜி.

உடனே, ந‌ம்ம‌ சர்தார்ஜியின் மூளையில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எரிந்த‌து. ப‌டுத்துக்கொண்டிருந்த‌வ‌ரை பார்த்து சொன்னார்,

"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"

*********************************************************************************

ஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. ந‌ம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

சர்தார்ஜியால‌ பொருக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

********************************************************************************

Wednesday, August 26, 2009

கிணறு



சேலத்திலிருந்து தருமபுரிக்கு என் பெற்றோர் குடிபெயர்ந்த நேரம். நான் நான்காம் வகுப்பு, என் அண்ணன்கள் இருவரும் ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். ஏதோ காரணத்திற்காக மதியம் பள்ளிக்கு விடுமுறை. வீட்டிற்க்கு வந்தால், வீடு பூட்டி இருந்தது.

அம்மா மார்கெட் போயிருப்பதாய் பக்கத்து வீட்டில் தெரிந்து கொண்டு, அங்கேயே பையை வைத்து விட்டு, மூவரும் பக்கத்து வயல்களில் தும்பி, பட்டாபூச்சி பிடிக்க கிளம்பி விட்டோம்.

கடைசியில் போய் சேர்ந்தது வயலுக்கு நீர் இரைக்கும், பெரிய இரட்டை கிணறு. சேலத்திலிருந்த வரை இது மாதிரி கிணறையோ வயல்வெளிகளையோ பார்த்ததில்லை, அதில் விளையாடியதில்லை. தண்ணீர் குறைந்து இருக்கும் போது தான் அது இரட்டை கிணறு, நீர் நிறைந்த நாட்களில் அது மிகப் பெரிய கிணறு. இருவர் ஒரு சேர இறங்கி ஏற, கிணறு வெட்டும் போதே பாதை அமைத்து இருந்தார்கள்.

ஒருபக்கம் ஒரு முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் காலியாக இருந்தது. இறங்கினோம், யாருக்கும் நீச்சல் தெரியாது. அண்ணன்களின் பேச்சை கேட்காமல், கைகால் கழுவுகிறேன் என்று, நீருக்குள் முழுகி பாசிபடந்திருந்த கல்லில் கால் வைத்தேன், அது வழுக்கி விட, தலை கீழாக நீருக்குள் விழுந்தேன், அண்ண‌ன்க‌ளின் குய்யோ, முய்யோ க‌த்த‌ல் க‌டைசியாக‌ மெதுவாக‌ கேட்ட‌து.



கண்விழித்து பார்த்த போது, அந்த பெரியவர் என் வயிற்றை அழுத்தி, முதல் உதவி செய்து கொண்டிருந்தார், கிண‌ற்றை சுற்றி மக்கள் கூட்டம். ஒருவர் அண்ணன்கள் இருவரையும், குச்சி வைத்து வெளுத்துக் கொண்டிருந்தார். இருவரும் அழுது கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

"நீச்சல் தெரியாத சின்ன பையனை கிணத்துல தள்ளி கொல்ல பாக்குறீங்க... யார்ரா நீங்க?"

"ப‌க்க‌த்துல‌ தான் புதுசா குடிவ‌ந்திருக்கோம்"

"ப‌க்க‌த்துல‌ன்னா..."

"ந‌டேச‌ க‌வுண்ட‌ர் தெருவுல‌"

"இந்த‌ பைய‌னை ஏண்டா கிணத்துல தள்ளினிங்க‌?"

"எங்க‌ த‌ம்பிதான், விளையாட‌ வ‌ந்தோம், தெரியாம‌ த‌வ‌றி விழுந்துட்டான்"

எல்லாரும் ப‌ள்ளி சீருடை அணிந்திருந்தோம்.

"ப‌டிக்கிற‌ புள்ள‌ங்க‌ளுக்கு கிண‌த்துல‌ என்ன‌ விளையாட்டு? ம‌றுப‌டி உங்களை இந்த‌ ப‌க்க‌ம் பார்தோம், அவ்வ‌ள‌வு தான்.... ஒழுங்கா வீடு போய் சேருங்க" விரட்டிவிட்டார்கள்.

மூவ‌ரும், வெளியே வ‌ந்தோம். 'எல்லாம் இவ‌னால‌ தான், சொன்ன‌ கேட்டா தானே...' ந‌ங்கென்று த‌லையில் ஒரு 'கொட்டு' விழுத்தது, பெரிய‌ அண்ண‌னிட‌மிருந்து.

இப்போது அழுது கொண்டிருந்த‌து நான்.

மொத்த‌மாக‌ ந‌னைந்திருந்தேன், அப்ப‌டியே வீட்டுக்கு போனால், அர்ச்ச‌னையும், த‌ர்மஅடியும் தொட‌ரும், என்ன‌ செய்வ‌து என எல்லோருக்கும் யோச‌னை.

க‌டைசியாக‌ எல்லாரும் ஒரு ம‌ன‌தாக‌ எடுத்த‌ முடிவின் ப‌டி, மொத்த‌ ஆடைக‌ளையும் அவிழ்த்து, நான் ஒரு ம‌‌ர‌த்த‌டியில் ஒழிந்து கொள்ள‌, செடிகளின் மீது காய‌வைத்து மறுபடியும் போட்டுக்கொண்டு வீடுவ‌ந்து சேர்ந்தோம்.

வெற்றிக‌ர‌மாக‌ உண்மையை வீட்டில் ம‌றைத்து உல‌விக்கொண்டிருந்த, அடுத்த இரண்டாவது நாள், எங்க‌ள் குட்டு வீட்டில் க‌ழ‌னித‌ண்ணீர் எடுக்க‌ வ‌ந்தவ‌ளின் மூல‌ம் வெளிப‌ட்ட‌து.

எங்களை எங்க‌ள் வீட்டில் வைத்தே பார்த்த‌ அவ‌ர், 'ஏம்மா இந்த‌ புள்ளைங்க‌ உங்க‌ புள்ளைங்க‌ளா... அஞ்சு நிமிசம் விட்டிருந்தா, அன்னிக்கு, இந்த சின்ன புள்ள செத்திருக்கும்...' என ஆரம்பித்து எல்லாவற்றையும் என் அம்மாவிடம், போட்டு கொடுத்து விட்டு போய்விட்டார்.

என்ன நடக்க போகிறதோ என் ப‌ய‌ந்த என‌க்கு அம்மாவிட‌மிருந்து எந்த‌ எதிர்வினையும் வராதது அப்போது பெரும் சந்தோஷம். ஆனால், அவ‌ருடைய‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கி இருந்ததற்கான அர்த்தம், அப்போது புரியவில்லை. ஒரு குழ‌ந்தைக்கு த‌ந்தையான‌ பின்பு இப்போது புரிகிற‌து.

அடுத்த வாரத்தில், ப‌க்க‌த்து வீட்டு மாமாவிட‌ம் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்ள‌ ஏற்பாடான‌து. அதன் பிறகு, ப‌ட‌த்தில் உள்ள‌து போல‌ ப‌ம்புசெட்டு ரூம் மேல் ஏறி கிண‌ற்றில் குதித்து விளையாடிய‌ நாட்க‌ள், இப்போதும் ப‌சுமையாக‌ நினைவில் இருக்கிறது.

மறக்காம பின்னூட்டம் போடுங்க சாமியோவ்...

Tuesday, August 25, 2009

'நோகாமல் நொங்கு தின்ன' - டாப் 10 வ‌ழிக‌ள்

ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை ஊர் மக்கள் மடக்கி பிடித்ததாகவும், சம்மந்தபட்ட புண்ணியாவான், ஊர் மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்க்கு சில காந்தி நோட்டுக்களை அள்ளி தெளித்து தொழிலை மக்கள் ஆசியுடன் தொடர்வதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.



தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் விட மாட்டான்னு, சும்மாவா சொன்னாங்க? இடைதேர்தலில் பணம் வாங்கி பழகிபோன நம்ம பொதுஜனம், இப்படி மணல் கொள்ளையர்களிடம், கல்லா கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.



இடைதேர்தல் வராத, ஆறு இல்லாத ஊர்காரர்கள், நோகாமல் நொங்கு தின்ன என்ன வழி? ஸோ, கிழ்க்கண்ட பத்து பேரை அனுகினால் ஒரு வேளை நொங்கு கிடைக்கலாம்.

1. வீரப்பன் இல்லியானாலும், அவனைத் தொடர்ந்து மரம் வெட்டி பிழைப்பவர்கள்.
2. மோனேபோலி 'டாஸ்மார்க்'குக்கு எதிராக‌ சொந்த‌மா காய்ச்சி ஊர‌ல் போடுப‌வ‌ர்க‌ள்.
3. ரேஷ‌ன் அரிசியை ப‌க்க‌த்து மாநில‌த்துக்கு க‌ட‌த்துப‌வ‌ர்க‌ள்.
4. ஏரி, குள‌ங்க‌ளை ஆக்கிர‌மித்து, பிளாட் போடும், ரிய‌ல் எஸ்டேட் கார‌ர்க‌ள்.
5. நிலம், குள‌ம் குட்டைக‌ளை தொழிற்சாலை க‌ழிவுக‌ளால் நாற‌ அடிக்கும் தொழில‌திப‌ர்க‌ள்.
6. ம‌க்க‌ளுக்கு பொதுவான‌ நில‌த்த‌டி நீரை அனும‌தியில்லாம‌ உறிஞ்சி பாக்கெட் போட்டு விற்ப‌வ‌ர்க‌ள்.
7. அநியாய‌மா ந‌ன்கொடை வ‌சூலிக்கும், க‌ல்வி த‌ந்தைக‌ள்.
8. குழந்தை தொழிலாள‌ர்க‌ளை வேலைக்கு வைக்கும், தொழில‌திப‌ர்க‌ள்.
9. மருவை, 'கேன்சர்' என்று ஆபரேஷன் செய்து தண்டல் வ‌சூலிக்கும் 'ஒரு சில' மருத்துவமனைகள்.
10. திடீர் என உருவாகி கோடிகளில் புரளும், சொகுசு சாமியார்கள்.

மேலே உள்ள எந்த குப்பனும், சுப்பனும் வாய்க்காத பரிதாபபட்ட ஊர் காரர்களே, உங்களுக்கான ஒரேவழி, உங்கள் ஊர் எம்.எல்.ஏ அல்லது எம்.பி எதுவும் செய்யவில்லைன்னு போராட்டம் நடத்தி இராஜினாமா பண்ண வைக்கலாம். இடைதேர்த‌ல் வ‌ருமில்ல‌?

பின்குறிப்பு 1: நொங்கு தின்ன‌ ஆசைப‌ட்டு எவரும் மேற்குறிப்பிட்டவர்களை த‌னிம‌னித‌னாக‌ அனுக‌ வேண்டாம், அப்புற‌ம், நீங்க‌ளே நொங்கு ஆக‌ வேண்டிய‌து தான்.

பின்குறிப்பு 2: 'நொங்கு' என்ற தலைப்பில், கூகுளிட்டபோது கிடைத்த படங்களில், பொருந்திய இருபடங்கள் உங்கள் பார்வைக்கு.

பிடிச்சிருந்தாலும், திட்டுறதானாலும் மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

Monday, August 24, 2009

விநாயகர் சதுர்த்தியும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் - பகிரங்க கடிதம்

விநாயகர் சதுர்த்திக்கும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் என்ன சம்பந்தம்? இப்படி தேவையில்லா கேள்வி கேட்பவருக்காக, தொலைக்காட்சி முன் தவம் இருக்கும் தொல்ஸின்(தொல்காப்பியனின்) அதிரடி பகிரங்க கடிதம்,



சன் டிவி - சிவா மனசுல சக்தி. விநாயகரின் தந்தை சிவா, தாய் சக்தி. சிவா மனசுல சக்தி இருப்பதால், விநாயகர் உதயம். இது போதாதா? 'பார்வதியின் அழுக்கு உருண்டை தான் விநாயகர்' என விதன்டாவாதம் பேசுபவர்களே, அழுக்கு உருண்டையானாலும், விநாயகரை தன் மகனாக ஏற்றுக்கொண்டவர் தான் சிவா, ஸோ, இந்த கேள்வியே அர்த்தமில்லாதது.



சன் டிவி - கஜினி. டைரக்டர் முருகதாஸ், ஹிரோ சூர்யா சிவக்குமார் என எல்லோரும், கனேஷின் தம்பியான முருகனின் பெயர் கொண்டவர்கள். ஒரிஜினல், முகம்மது கஜினியே பதினேலுமுறை படையெடுத்து, கடைசியில் கொள்ளையடித்தது, கனேஷின் தந்தையான சிவன் கோவிலில் தானே?



சன் டிவி - ஸ்பைடர் மென். வேறு ஒரு ஜீவராசியின் தலையை தன் தலையாக கொண்ட விநாயகரின் பிற‌ந்த நாளைக்கு, முழுவதும் வேறு ஜீவராசியின் குணநலன்களுடன் மாறும் ஹிரோவின் படத்தை விட வேறு எந்த படம் பொருந்தும்?

ஜெயா டிவி - டிஷ்யும். படத்தின் ஹிரோ ஜீவா. இவருடைய உண்மையான பெயர் 'அமர் சௌத்திரி'. அமர் யார்? சிவன். சிவன் யார்? விநாயகரின் அப்பா. வேறேன்ன வேண்டும்?



கலைஞர் டிவி - பில்லா. உலக அளவில் இந்த படத்தை வினியோகம் செய்தது, 'ஐங்கரன் இன்டர்நெஷனல்' தான். அது மட்டும் இல்லை, இப்ப‌ட‌த்தில் ந‌டித்துள்ள‌ 'செக்கூரிடி' பிர‌புவின் முழு பெய‌ர் 'பிர‌பு கனேச‌‌ன்' என்ப‌தை தெரிவித்துக் கொள்கிறேன். ப‌ட‌ ஹிரோ, விநாய‌க‌ரின் த‌ம்பியான‌ முருக‌னை ப‌ற்றி பாட‌ல் பாடுவ‌தை நினைவு கூற‌ விரும்புகிறேன்.



கலைஞர் டிவி - சரோஜா. சரோஜா என்றால் என்ன? தாமரை. யூ நோ, ஆல் காட்’ஸ்(GOD’S) ஆல் டைம் ஃபேவரிட் ஃப்ளவர் இஸ் லோட்டஸ், இன்குலிடிங் லார்ட் கனேசா. விநாயகர் தாமரையில் உட்கார்ந்திருக்கும் படமே சாட்சி.



கலைஞர் டிவி - சற்று முன் கிடைத்த தகவல். ப்ப்பா...இப்பவே கண்ண கட்டுதே... அட போங்கப்பா, ஏதோ ஒரு சம்பந்தம் இல்லாமலா, படம் போடுவாங்க? நீங்களே ஆராய்ச்சி பண்ணிக்கோங்க.

இப்படிக்கு,
தொலைக்காட்சி தொல்ஸ்.

மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

Sunday, August 23, 2009

கந்தசாமி


ஸ்ரேயா, கிருஷ்ணா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், வெளி நாட்டு காட்சிகள், ஒரு பிட் ஸாங் இது போதாதா? தெலுங்கில் படம் ஓட வாய்ப்பிருக்கிறது.

இது ஒன்றுதான் தயாரிப்பாளர், கலைப்புலி தானு அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம். மற்றபடி ஆளவந்தானில் படுத்தவரை, படுத்த படுக்கையாக மாற்ற சுசி கணேஷன் போட்ட திட்டத்தில் ஓரளவிற்க்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

கதையாவது புதிதா என்றால், அதுவுமில்லை, இந்தியனை சுட்டு எடுத்த ரமணா, சிவாஜி மாதிரியான படங்களை சுட்டு, கொத்து பரோட்டா போட்டிருக்கிறார்கள்.

வடிவேலுவா அது? சகிக்கவில்லை, இவர் இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால், விவேக்கை விடுங்கள், கஞ்சா கருப்பு போன்றவர்கள் ஓவர்டேக் பண்ணி போய்க்கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒரு காட்சியில் உருட்டு கட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொள்வார், பார்ப்பவர்களுக்கும் அதே மாதிரி பண்ணிக்கொள்ளலாம் போலிருக்கிறது.

சி.பி.ஐ டைரக்டராக வரும், கிருஷ்ணாவின் வாயை உற்று பார்த்து தொலைத்து விட்டதால், அவர் தெலுங்கு பேசுவது போலவே ஒரு பிரம்மை.

பிரபுவிற்க்கு செக்கூரிடி வேலையிலிருந்து ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது.

விக்ரம் உழைத்து இருக்கிறார், ஆனால், அவருக்கு பீமாவில் பிடித்த சனி, கந்தசாமியை கடந்து இராவனா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது போலும், ஒவ்வோரு படமும் இரண்டு வருடம் செய்தால் ஏற்கனவே வயதானவரை ரசிகர்கள் "முன்னாள்" ஆக்கிவிடுவார்கள்.

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதும், விக்ரம் வில்லன்களிடம் உண்மையை சொல்கிறார், அப்பாடா சீக்கிரம் முடிந்து விடும் என்று மனதை தேற்றிக்கொண்டால், மெக்ஸிகோ, புது வில்லன் என கந்தசாமி பார்ட் 2 ஆரம்பித்து விடுகிறார்கள், போதுமடா சாமி.... ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளம்... தாங்க முடியவில்லை. ஸ்ரேயாவின் உடைகளுக்கு கத்திரி போட்டவரிடம் படத்தை கொடுத்திருந்தாலாவது, படத்தை 'சின்ன'தாய் பண்ணியிருப்பார்.

'முடி இல்லாதவன் மூளை காரன்னு நிருபிச்சிட்டடா' என வடிவேலு ஒரு வசனம் பேசுவார், சுசி கனேஷனுக்கு முடி நிறைய இருக்கிறது.

'ரெண்டு வாரம் பொறுத்தா நல்ல பிரிண்டு 'நெட்'ல வந்துரும்' சொன்ன நண்பரை மதிக்காமல், ஒரு டிக்கெட்டுக்கு 15 டாலர் கொடுத்து, குடும்பத்தோடு போன எனக்கு, ஒரே ஒரு ஆறுதல், மினியாபோலிஸில் உட்கார்ந்து கொண்டு உடனே விமர்சனம் போடமுடிந்தது தான்.

ஆகஸ்ட் முடிந்ததும் திரும்ப வரலாம்ன்னு இருந்தேன், ப்ரேகிற்க்கு ப்ரேக் போட வைத்த கந்தசாமிக்கு நன்றி. மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

Monday, August 3, 2009

ப்ரேக்


ப்ரேக்.

படித்துவிட்டு உடனே பின்னூட்டம் இடும் பிரபு, சங்கா போன்றோருக்கும், போனில் விமர்ச்சிக்கும், நௌசாத், கே.கே போன்றோருக்கும், எந்த ரியாக்க்ஷனும் காட்டாமல் தொடர்ந்து படித்த ராஜா, பாலா, ராம், ராகேஷ் போன்றோருக்கும் நன்றிகள் பல.

"உருப்படியான காரியம் பண்ணின" என் நினைக்கும் மற்றும் பலருக்கும், ஏதோ என்னாலான சின்ன உதவி.

இப்படிக்கு,

சங்கர்

Wednesday, July 29, 2009

அரசு ஆரம்பப்பள்ளி, அப்பாவு நகர், தருமபுரி


ஒன்னிலிருந்து மூனாவது வரைக்கும் சேலம் நாலுரோடு பக்கம் இருக்கும் லிட்டில் ப்ஃளவர் பள்ளி. ஏதோ கடமைக்காக போனதுனால, சுவாரசியமா ஏதும் சொல்லிக்கிற மாதிரி ஞாபகமில்லை.

அப்பா வேலை காரணமா நாலவதிலிருந்து தருமபுரி தான். அரசு ஆரம்பப்பள்ளி, அப்பாவு நகர், தருமபுரி.

சந்திரா டீச்சர் தான் எங்க கிளாஸ் டீச்சர். ரொம்ப நல்ல டைப். பசங்கலை எப்பவும் அடிக்க மாட்டாங்க.

பாலமுருகன், மணி, வாசு இவிஙக தான் என் தோஸ்த். எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டை வந்தாலும், எப்படியோ உடனே சேந்துக்குவோம்.

எங்களுக்கு ரொம்ப பிடிச்ச பீரியட், ரெண்டாவது பீரியட் தான். காரணம், அதுக்கப்புறம் தான் 10 நிமிஷம் இன்டர்வல் வரும், எதையாவது வாங்கி திங்கலாம்.

யார் எது வாங்கினாலும், எல்லோரும் பங்கு போட்டுக்குவோம். எனக்கு வீட்டுல கை காசு(பாக்கெட் மணி) அவ்வள‌‌வா தேறாது. பரிச்ட்சையில காட்றேன்னு சொல்லி ஏமாத்தி வாங்கி தின்னுக்கிட்டிருந்தேன். அவிங்கலும் அத பெரிசா எடுத்துக்கலை.

தேன் மிட்டாய், கல்கோனா, கம்மர் கட்டு, ஜவ்வு மிட்டாய், இலந்த வடை, அவிச்ச கிழங்கு இதெல்லாம் எங்க பேவரிட் ஐட்டம்.

யார்கிட்டயும் காசில்லன்னா... அன்னிக்கு ஸ்கூல் முன்னாடி இருக்கும் பெரிய அரச மரத்திலிருந்து, கிழே விழுந்த அத்திப்ப‌ழத்தை பொறுக்கி எடுத்துக்குவோம்.

மரத்துக்கிழே சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும், கோவில்ன்னா பெரிய கோவில் எல்லாம் கிடையாது. சின்ன பிள்ளையார் சிலை. முன்னாடி ரெண்டு கருங்கல்லு பலகை அவ்வளவு தான்.

அந்த கருங்கல் பலகை மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு அந்த பழங்களை ஊதி ஊதி திம்போம். அத்தி பழத்தில சமயத்துல சின்ன பூச்சி இருக்கும் அதை ஊதி திங்கறதே ஒரு தனி க‌லை.

எப்பவாச்சும் கைல காசு கொஞ்சம் அதிகமிருந்தால், குச்சி ஐஸ் தான். சைக்கிள் கேரியரில பெரிய மரப் பொட்டி, அது தான் மொத்த கடையே, சரியா இன்டர்வல் நேரத்துல சைக்கிள் ஸ்கூலுக்கு வந்துரும், இன்டர்வல் முடிஞ்சதும், ஊர் சுத்த போயிடும்.

ஆரஞ்சு ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா ஐஸ் ன்னு, பல ரகம். ரவுண்டா, செவ்வகமா, பல கலருல இருக்கும், சில சமயம், ஒரே ஐஸ்ல ரெண்டு மூனு கலர் கூட இருக்கும்.

அன்னிக்கு ஐஸ்ன்னு முடிவாகி, வாங்க கூட்டத்தில நின்னோம், முதல்ல ஐஸ் வாங்கின பையன் வாயில வைச்சதும், "என்ணண்னெ, ஐஸ் ஒரே உப்பு கரிக்குது" ன்னான்.

டென்சன் ஆன ஐஸ்காரர், "தே, ஐஸ் எங்கியாச்சும், உப்பு கரிக்குமா?" ன்னு சொல்லி, பெட்டிக்குள்ள கையை விட்டார். ஒரு ஐஸை எடுத்து நக்கி பார்த்து விட்டு, "சக்கரை மாதிரி இருக்கு, உப்பு கரிக்குதாம் உப்பு" உள்ளே போட்டார். வியாபாரம் தொடர்ந்தது.

அன்னியோடு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போதும், குச்சி ஐஸ் சைக்கிளை பார்க்கும் போதும் இது தான் ஞாபகத்திற்க்கு வரும்.

Thursday, July 23, 2009

சே, இப்படியும் மனிதர்களா...


2004. ஆறு வருட அமெரிக்க வாழ்க்கை முடித்து, இந்தியா திரும்பி இருந்தேன்.

2 மாத ஓய்விற்க்கு பிறகு, பெங்களூருவில் ஒரு பெரிய MNC கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னோடு ஒரே நாளில், வேலைக்கு சேர்ந்த நண்பர் லோகேஷின் முதல் அறிமுகம் அப்போது தான். தமிழ் என்பதால் உடனே ஒட்டிக் கொண்டோம், இருவரும் வீடு தேடிக் கொண்டிருந்ததால் மேலும் நெருக்கம் அதிகம் ஆனது, இருவரும் சேர்த்து இருப்போம் என முடிவாகி, கோரமண்டலா, டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீடு பிடித்தோம்.

அன்று இரவு வீட்டு ஓனருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்க்காக இருவரும், ஒன்றாக ஆபிஸிலிருந்து கிளம்பி ஆட்டோ பிடித்தோம்.

வழியில், ATM-ல் நிறுத்தி 20 ஆயிரம் எடுத்துக்கொண்டேன். பெரிய தொகையாக இருந்ததால், அதை என் பர்ஸ்(Wallet) - ல் வைக்க முடியவில்லை. ஆனால் எப்படியோ, கஷ்டபட்டு திணித்து பேண்ட் முன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஆட்டோவில் தொடர்ந்தோம், நம்ம ஊர் சாலையும், ஆட்டோவும் சேர்ந்தால் கேட்கத்தேவையில்லை, நன்றாக குழுங்கி குழுங்கி சென்றது.

வீடு சேர்ந்ததும், ஆட்டோவிற்க்கு காசு கொடுக்க பையில் கை வைத்தேன், பகீர் என்றது. பர்ஸ் காணவில்லை. எனக்கு பெரிய ஷாக், அட்வான்ஸ் பணத்தைவிட அதி முக்கியமான பொருட்கள் அதில் உள்ளது. இரு ATM கார்ட்ஸ், ஒரு க்ரிடிட் கார்ட், எல்லாம் அமெரிக்க வங்கியினுடயது. டாலரில் தேய்க்கலாம், மதிப்பு பல லட்சங்கள். மேலும், ஒரு நியூஜெர்ஸி மாநில ட்ரைவிங் லைஸ்சென்ஸ்.

ஒரு வருடம்(H1B பிரச்சனையால்), கழித்து மீண்டும் அங்கு செல்லலாம் என இருந்ததால், வங்கி கணக்குகளை மூடாமல் இருந்தேன், வேறு இந்திய வங்கி கணக்கு ஏதும் இல்லையாதலால், இவையனைத்தையும் கையில் வைத்திருக்க வேண்டி இருந்தது.

ATMக்கும் வீட்டிற்க்கும், ஒரு கிலோ மீட்டருக்குள் தான் இருக்கும், லோகேஷ் ஆட்டோவிற்க்கு பணம் கட் செய்து விட்டு வர, இருவரும், வந்த வழியே தேடிக்கொண்டே ஒடினோம், நன்றாக இருட்ட ஆரம்பித்திருத்தது. மீண்டும், வீட்டு ஓனரிடம், டார்ஃச் வாங்கி வந்து தேடினோம், உகூம், ஒரு பலனுமில்லை. கவனக்குறைவாக இருந்தது என் தவறு தான் என்றாலும், அதற்கு தண்டனை கொஞ்சம், பெரியதாகவே இருந்தது.

"போய் போலீஸ்ல கம்ளையண்ட் குடுத்துட்டு வாங்க, ஒரு வேளை கிடைக்கலாம்" - வீட்டு ஓனர்.

மனம் சிந்திக்க மாட்டேன் என்றது, வீட்டு ஓனரே அவர் மகனை பைக் எடுத்துக் கொண்டு துணைக்கு போய் வரச் சொல்லி அனுப்பினார்.

போலீஸ் ஸ்டேசன் போனோம். எழுத்தரா, இன்ஸ்பெக்டரா என்று தெரியாது, எல்லாவற்றையும் நிதானமாக கேட்டவர்,

"இப்ப எங்களை என்ன பண்ண சொல்றீங்க? இதெல்லாம் கிடைக்காது தம்பி, எங்களுக்கு நிறைய வேலையிருக்கு" ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கலந்து கலந்து பேசினார். எனக்கும் மொழி புரியும், பேசத்தான் தெரியாது.

ஓனர் மகன் அவரிடம் கன்னடத்தில் பேசினார், "சார்... கிரெடிட் கார்டு யாராவது யூஸ் பண்ணிட்டா, கார்டு கம்பெனியில பேச கம்ளையன்ட் வேனும்"

"சரி... சரி... இதுல கம்ளையன்ட் எழுதி குடுங்க" ஒரு வெற்றுத்தாளை நீட்டினார். எழுதிக்கொடுத்தேன். வாங்கி பார்த்தவர், "உங்க செல் நம்பரையும், எழுதுங்க" என்றார்.

நான் அப்போது செல் க‌னெக்ஷன் வாங்கவில்லையாதலால், லோகேஷ் நம்பரை கொடுத்தேன். என் முன், வாக்கி டாக்கி ஆன் செய்து ரோந்தில் உள்ள ஒரிரு காவலர்களிடம் பேசி, பர்ஸ் கிடைத்தால் ஸ்டேசன் வருமாறு கூறினார்.

நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானேன். என்னை நிறுத்திய அவர், "சார் ஏதாவது குடுத்துட்டு போங்க" என்றார்.

"ஏதாவதுன்னா?"

"கம்ளையண்ட் வாங்கி இருக்கோம்ல்ல, பர்ஸ் கிடைச்சா கூப்பிடறேன், ஒரு 100 ரூபா குடுத்துட்டு போங்க"

"சார் மொத்தமா தொலைச்சுட்டு நிக்கிறேன், இப்ப எப்படி?"

"உங்க ப்ரண்ட்ஸ் யாராச்சும் இருந்தா, அவிங்ககிட்ட வாங்கி குடுங்க"

"சே... இப்படியும் மனிதர்களா..."

என்று எனக்குள் நொந்து கொண்டேன்.

"பர்ஸ் கிடைச்சா தர்றேன்" னு சொல்லி நகர்ந்தேன்.

நேராக ப்ரவுஸிங் சென்டர் சென்று, என் அமெரிக்க வங்கி கணக்கில் நுழைந்து, கார்ட் கஸ்டமர் சர்விஸ் நம்பர் தேடி பிடித்து, போன் செய்ய ரெடியானேன்.

"சங்கர்... சங்கர்.... கிடைச்சுடிச்சு" லோகேஷ் கத்திக்கொண்டு ஓனர் மகனுடன் பைக்கில் வந்திறங்கினான்.

"வாவ்... ஸுப்பர்!!! எப்படி?" ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

"யாரோ ஒருத்தர் என் மொபைல்ல கால் பண்ணி சொன்னார், அவர் வீட்டு வாசலில் கிடைச்சதாம், என் நம்பர் சுனில் கொடுத்திருக்கான்"

"சுனில் நம்பரு?"

"உங்க பர்ஸ்ல இருந்திருக்கு..." எங்களோடு ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்த இன்னொரு நண்பர் சுனில்.

"உங்களை நேர்ல வரச்சொல்லி அவிங்க அட்ரஸ் குடுத்திருக்காங்க.... வாங்க போவோம்" ‍லோகேஷ்.

போனோம்.

"வாங்க, வாங்க... உங்க டென்சன் புரியுது..., உள்ள வந்து உட்காருங்க..." ஒரு பெரியவர்.

"இல்லை பரவால‌"

"அடடே... ஒன்னும் கூச்ச படவேனாம், உள்ள வந்து உட்கார்ந்தாதான் உங்க பர்ஸ் கிடைக்கும்." பெரியவரின் மனைவி.

உட்கார்ந்தோம்.

"காபியா..டீயா?" பெரியவரின் மனைவி.

"பரவாலை, அதெல்லாம் ஒன்னும்..."

"சரி காபியே போடறேன், இந்த பிஸ்கட் சாப்பிட்டுக்கிட்டு இருங்க" உள்ளெ சென்று விட்டார்.

அந்த பெரியவர் எங்களிடம் பேச்சு கொடுத்தார். "எங்க சின்ன பையன் வீட்டுக்குள்ள நுழையும் போது அவனுக்கு கிடைச்சுருக்கு. அவன் தான் பர்ஸ இருந்த பேப்பர்ல கிடைச்ச நெம்பரெல்லாம் ட்ரை பண்ணி உங்களை பிடிச்சான்"

ஷோபாவின் நுனியில் நெளிந்துக் கொண்டு இருந்தேன்.

"பிஸ்கட் அப்படியெ இருக்கு, எடுத்துகங்க தம்பி"

ஒரு பிஸ்கட் உருவினோம். காப்பி வந்தது.

"சாமி படம் முன் வச்சிருக்கு, வரேன்" காப்பியை டேபிளில் வைத்து விட்டு ம‌றுப‌டியும் உள்ளெ போனார்.

அவர்களுடைய மகன் வந்து எதிரே அமர்ந்து, பயோகாண் - இல் வேலை செய்வதாகவும், என் அமெரிக்க வாழ்க்கை எப்படி என்றும், ஏன் வந்துட்டீங்க என்றும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

"சரியா இருக்கா பார்த்துக்கோங்க" அந்த அம்மா பர்ஸை என்னிடம் கொடுத்தார்.

நான் பர்ஸை திறந்து உள்ளெ இருந்த மொத்த பணத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தேன், "இது உங்களுடையது, மறுக்காம எடுத்துக்குனும்"

பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது, "எங்களை இழிவு படுத்தாதீங்க" என்ன பேசியும் அந்த பெரியவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. நன்றி சொல்லிவிட்டு திரும்பும் போது,

"சே... இப்படியும் மனிதர்களா..."

என்று எனக்குள் நெகிழ்ந்து விட்டேன்.

பின்குறிப்பு 1: லோகேஷ் நெம்பரில் போன் செய்து அவன் மூலமாக, பர்ஸ் கிடைத்த மேட்டர் தெரிந்து கொண்ட போலீஸ்காரர், இரு நாட்களாக எங்களை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

பின்குறிப்பு 2: அந்த பெரியவரை சமாதானப்படுத்தி, ஒரு சின்ன மீன் தொட்டி பரிசு கொடுத்து, மீண்டும் ஒரு முறை காபி குடித்து விட்டு வந்தோம்.

Tuesday, July 21, 2009

ப்ளாக் புட்டுக்கும், பேக்கப் ஃபைலும் வைரஸ் வந்து காலி ஆகும்


இந்த கடிதம் வந்து 5 நாட்களுக்குள், இதே மாதிரி இன்னும் 50 பேருக்கு நீங்களும் கடிதம் எழுத வேண்டும், அப்படி செய்த பலருக்கு அடுதத 30 நாளில், ஒரு தங்க புதையல் கிடைத்தது, மகளுக்கு திருமணம் ஆனது. பதவி உயர்வு கிடைத்தது. இதை உதாசினப் படுத்தியவருக்கு, அடுத்த 10 நாளில், ஆக்ஸிடெண்ட் ஆகி கால் போனது. வீடு ஜப்திக்கு வந்தது, அவர் மனைவிக்கும் தீராத வியாதி வந்தது.
இப்படிக்கு,

.......துனை.

உங்களில் பலர் இதை மாதிரி கடிதம் பார்த்திருக்கலாம், அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்.

இதை போன்ற கடிதம், நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டிற்க்கும் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்? என்று இதை பற்றி என் பெற்றோர் பேசிக்கொண்டதும் ஞபாகம் இருக்கிறது. என்ன செய்தார்கள் என்று தெரியாது.

நிற்க.

நானோ ப்ளாகிற்க்கு புதிது, என் தினவை தீர்த்துக்கொள்ள ப்ளாக் - யை ஆரம்பித்துவிட்டேன். அவ்வப்போது, மற்றவர் பதிவை படிப்பேன், ஆனால், பின்னூட்டம் இட மாட்டேன். அதுவும், என் பதிவில் பின்னூட்டம் எழுதியவருக்கு கூட பதில் பின்னூட்டம் இடுவதில்லை. இடக்கூடாது என்று ஆனவம் ஏதும் இல்லை, ஏனோ தோன்றியதில்லை.

சென்ற வாரம், சங்கா அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்து இருந்தது. 'உங்களை “Interesting Blog" விருதுல கோர்த்து விட்டிருக்கிறேன், பிடித்திருந்தால் தொடருங்கள்!' - என்று.

சஙகாவிற்க்கு நன்றி சொல்லிவிட்டு, விருதா? அது என்ன? எது? என்று தெரிந்து கொள்ளலாம் என்று புறப்பட்டேன். அலுவலக வேலை ஒரு பக்கம், நான் இப்போது சீரியஸாக செய்து கொண்டு இருக்கும் ஸ்டாக் மார்கெட் ஒரு பக்கம், ப்ளாக்(Blog) ஒரு பக்கம் ('எப்பவும் இந்த லேப்டாப கட்டிக்கிட்டு அழுவுங்க' பொண்டாட்டி சொல்வதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுகின்றேன்.) ஒரு வாரமாக பலரின் பதிவுகளை மேய்ந்து திரிந்தேன். பல உண்மை புலப்பட்டது. மேலே உள்ள கடிதம் எனது கற்பனையில் வேறு மாதிரி தோன்றியது.

இதே மாதிரி இன்னும் 6 பேருக்கு நீங்களும் கொடுக்க வேண்டும், அப்படி செய்த பலருக்கு அடுதத 30 நாளில், பல ஃபாளோயர்ஸ்(Followers ) சேர்ந்தார்கள். ஒவ்வொரு பதிவும், யுத்ஃபுல் விகடனில் வரும், எல்லா பதிவும் நிறைய ஒட்டுக்கள் பெறும். இதை உதாசினப் படுத்தியவருக்கு, அடுத்த 10 நாளில், ப்ளாக் புட்டுக்கும், பேக்கப் ஃபைலும், வைரஸ் வந்து காலி ஆகும்.

இப்படிக்கு,

.......துனை.

சரி மொக்கை போதும், சீரியஸ்ஸாக விஷயத்திற்க்கு வருவோம்.

'பலரின் பதிவுகளை மேய்ந்து திரிந்தேன்' என்று சொன்னேன் அல்லவா? அதில் புலப்பட்டது, தன்னுடைய திருப்திக்காக எழுதுவதாக பலர் சொன்னலும், கீழே உள்ள சில சின்ன விஷயங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. (என்னையும் சேர்த்துத்தான்)

1. தன்னுடைய பதிவிற்க்கு பின்னுட்டம் நிறைய வருவது,

2. தன்னுடைய ப்ளாக் - க்கு நிறைய ஃபாலோயார்ஸ் சேருவது.

3. ஓட்டுப்பதிவில் தன்னுடைய பதிவிற்க்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பது.

4. தன்னுடைய ப்ளாக் - க்கு நிறைய ஹிட்டுக்கள் கிடைப்பது.

5. எல்லாவற்றிக்கும் மேலாக 'பட்டாம்பூச்சி', 'சுவாரசியமான ப்ளாக்' போன்ற சின்ன சின்ன விஷயங்கள்.

இதெல்லாம் பொய் என்றால், ஃபாலோயார்ஸ் எதற்கு? ஹிட் கௌண்டர்கள் எதற்கு? ஓட்டுக்கள் எதற்கு? பின்னுட்டமும் அதற்கு பதிலும் எதற்கு?

ஒருவரோ , 'பட்டாம்பூச்சி', 'சுவாரசியமான ப்ளாக்' இருமுறை வாங்கினேன் என பெருமை கொள்கிறார், இன்னொருவரோ, இதில் ஒன்றுமில்லை என சங்கிலியை துண்டிக்கிறார். இது அவரவர் விருப்பம்.

''என்னடா சொல்ல வர வென்ரு?' என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. ஆதலால்...

முகம் தெரியாத ஒருவர், அவருக்கு பின்னூட்டம் இடாமல், ஃபாலோயாராக சேராமல், இதை அளிக்கிறார் என்றால், என் பதிவில் உள்ள ஏதோ ஒரு விஷயம் அவரை கவர்ந்திருக்கிறது என்று தானே பொருள்? ஸோ, சங்கா என்னை சந்தோஷ படுத்திய மாதிரி, இன்னும் 6 பேரை சந்தோஷ படுத்தலாம்(சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷ படுத்தறது தான் - யாரு முதல்ல சொன்னங்களோ தெரியாது, நான் முதல்ல கேட்டது, பாக்யாவில் பாக்யாராஜ் சொன்னப்பத்தான்) என எண்ணி, என்னை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்த, கீழே உள்ளர்களுக்கு, 'Interesting Blog' விருது போய் சேருகிறது.

சங்கிலியை தொடர்வதும், அறுப்பதும் அவரவர் விருப்பம்.

சூர்யாவின் வண்ணத்துபூச்சியார்,

என்.கணேசனின் என்.கணேசன்,

சுரேஷின் சக்கரை,

தம்பி பிரபாகரின் வாழ்க்கை வாழ்வதற்கே...,

வடகரை வேலனின் வடகரை வேலன்,

நாகாவின் ஒரு ஊரில்....

பின்குறிப்பு: இப்போதெல்லாம் முடிந்த வரை படிப்பதற்க்கு நல்ல பிள்ளையாக பின்னுட்டமோ பதில் பின்னுட்டமோ இடுவது என்று முடிவு செய்துள்ளேன். ஹூம்,,, பார்ப்போம்.

Sunday, July 19, 2009

அமெரிக்க உழவர் சந்தை

போட்டோவில் ராம் என்கிற 'ஷக்கி மாமா' உழவர் சந்தையில்.

முதலில் என் புகைபடங்களை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு மிக்க நன்றி, நன்றி, நன்றி. இனி இதன் கதை.

நண்பர் ராம் லஞ்ச் பாக்ஸை திறந்ததும், பருப்பு கீரை நறுமணம் தூக்கியது.

"ராம் வாசனை பட்டைய கிளப்புது... என்ன கீரை?"

"மனதக்காளி கீரை..."

"ரியலி? 2 வருஷம் ஆச்சு, லாஸ்ட் இந்தியா ட்ரிப்-ல சாப்பிட்டது. எங்க வாங்கினது, பூஜாலயா(இந்தியன் ஸ்டோர்)?"

"நீங்க வேற, இது ஃபார்மர்ஸ் மார்கெட்-ல வாங்கினது."

"ஃபார்மர்ஸ் மார்கெட்-லயா? அந்த ஸ்டோர் எங்க இருக்கு?"

"அது ஸ்டோர் இல்ல, உழவர் சந்தை மாதிரி, நம்ம கம்யூனிடி சென்டர் பார்க்கிங் லாட்-ல எவ்ரி தர்ஸ் டே போடறாங்க, ஒரு பெரிய கீரை கட்டு ஒரு டாலர் தான், அதுவும் ரொம்ப பிரஸ்ஸா இருக்கு. கீரை மட்டுமில்லை, இன்னும் நிறைய ஐட்டம்ஸ் இருக்கு, வேன்னா... நெக்ஸ்ட் வீக் நாம சேந்து போவோம்"

அடுத்த வியாழக்கிழமை. மதியம் 3 மணி. ஆத்துக்காரம்மகிட்ட(அட,WIFE தாங்க) இருந்து போன்.

"நானும் சுஜாதாவும், ஃபார்மர்ஸ் மார்கெட் போயிட்டு வந்திடறோம்"

"சரி சரி, அப்ப பாப்பா...?"

"அவ தூங்கறா... எழ்றதுக்குள்ள வந்துருவோம், அப்படியே எழுந்தா... உங்க அம்மா பார்த்துக்குவாங்க"

அப்பாடா ஒரு வேலை மிச்சம். அடுத்த 10 நிமிடத்துல மீண்டும் போன், மறுபடியும், வைஃப்க்கிட்ட இருந்து தான். "ஏங்க.. பாப்பா எழுந்து அழறா... நீங்களே போயிட்டு வந்திருங்க."

நானும் ராமும், 4 மணிக்கெல்லாம், ஆரம்பித்தோம். போகும் போது பேச்சு, என் புது ப்ளாக் பற்றி அடிபட்டது.

"நெக்ட், இந்த உழவர் சந்தை பற்றி எழுதுங்களேன்..."

"ஸூப்பர் ஐடியா... பட்டைய கிளப்பிடுவோம்... சே, கேமரா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."

"அதான் உங்க ஐபோன்(iPhone) இருக்குள்ள..."

"ஆமா இல்ல... மறுபடியும், நல்ல ஐடியா குடுத்தீங்க... இதுக்காகவே உங்க படம் போட்டு உங்களை பேமஸ் ஆக்கிடறேன்."

"ஐய்யயோ அதெல்லாம் வேனாம், அப்புறம் இந்தியா போனா ஏர்போர்ட்ல இருந்தே ரசிகர் தொல்லை ஆரம்பிச்சுடும்...ஸோ... தினமலர் அந்து மணி, லென்ஸ் மாமா மாதிரிஎன் தலையை ப்ளாக் பண்ணிருங்க..."

"அவ்வளவு கஷ்டம் எதுக்கு, உங்க போட்டோவை அப்படியே போட்டு, இது தான் 'ஷக்கி மாமா'ந்னு எழுதிடறேன். (எங்கள் குருப் ஜூனியர் எல்லாம், ராமை 'ஷக்கி ஷக்கி' நு சொல்லி தான் விளையாடும். காரணம், குழந்தைகள் பர்த்டே கொண்டாடும் ஒரு இடம் Chuck'e Cheese. அங்கு Chuck என்று ஒரு கேரக்டர் உண்டு. ராம் அடிக்கடி குழந்தைகளிடம் நான் தான் Chuck'e என்று சொல்லி விளையாடுவார்).

ப்ளாகில் சும்மா போட்டோ போடுவதற்க்கு பதிலா விகடனுக்கு அனுப்பினால் என்ன என்று தோனியது. இந்த போட்டோக்களுக்கான விகடன் லின்ங் அமெரிக்க உழவர் சந்தை

பின் குறிப்பு: இந்த ப்ளாகை படிப்பவர்கள், நண்பர் ராமுக்கு ரசிகர் மன்றம் ஆரம்ப்பித்து, அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று தயவு செய்துக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, July 16, 2009

தேக்கடி போட்டிங் டிக்கெட்



காலேஜ் டூர். கொடைகானல் போலாம்ன்னு முடிவாச்சி. மொத்த பஸ்ஸுக்கு ஆள் சேராததினால, தனியா டூர் பஸ் புக் பண்ணலை. அதுவுமில்லாம, எந்த வாத்தியும் கூட வரலை.

சரி, ரெகுலர் பஸ்லயே டிக்கெட் வாங்கி ஒரு குருப்பா போய்வரலாம்ன்னு முடிவாச்சு.

கடைசி நாளு, என்னாச்சுன்னு தெரியலை, க்ளாஸ் ரெப் சுந்தரேசன் என்கிட்ட வந்து, வசூல் பணத்தை தினிச்சு, "என்னால வர முடியலை, எல்லோரும் ஒழுங்கா போய்ட்டு வாங்க, எல்லா பணத்துக்கும், ஒழுங்கா கணக்கு வைச்சுக்கோ"ன்னான்.

இத பாத்த PVP-க்கு அப்பவே பகீர்ன்னுச்சு, "என்னாடா இந்த குடிகாரா கும்பலுக்கிட்ட இப்படி மொத்த பணத்தையும் தூக்கி குடுத்துட்டானே" ன்னு ஒரே யோசனை. நானும் அவனும், ஒரெ ஊருக்காரனா போனதால, என்கிட்ட ஒன்னும் சொல்லவும் முடியலை, மெள்ளவும் முடியலை.

எல்லோரும் தாம்பரம் பஸ்ஸாடான்ட்ல ஆஜர். பஸ்ஸுக்கு இன்னும் 2 மணி நேரம் இருந்ததால, நானும் என் கேங்கும் அப்படியே ஒரு பார் பக்கமா ஒதுங்க ப்ளான் போட்டோம்.

எப்படியோ இது PVP தெரிந்சு, நானும் வாரேன்னு, எங்க கூடவே திரிஞ்சான். ஒரு வழியா அவனை கழட்டி விட்டுட்டு, ஆளுக்கு ஒரு பீர் உள்ள தள்ளிக்கிட்டு , ஒரு ஃப்ள்(FULL) ஸ்டாக் பண்ணிக்கிட்டு வந்தோம்.

"வசூல் பணத்தை ஆரம்பத்திலேயே இப்பிடி பண்றீஙகளேடா..." பொறுக்காம கேட்டுட்டான்.

சொந்த பணத்துல குடிச்சாலும், இவனுக்கு வேற பதில் சொல்லவேண்டி இருக்கேன்னு... எனக்கு ஒரெ டென்ஷன், "ஆமாம், கடைசியில கணக்கு காட்டும் போது சரியில்லைன்னா கேளு".

கொடைகானல் போய் சேர்ந்தோம்.

ஒரு ஹோட்டலல சாப்பிட போனா போதும்..., ஒரு பொட்டி கடையில தம் வாங்க போனா போதும்... , எப்பவவும், PVP பின்னால நிப்பான். சொன்னா நம்ப மாட்டீங்க டூர் முடியிற வரை நிழல் மாதிரி இருந்தான்.

கொடை முடிச்சு, திரும்ப போறதா ப்ளேன்... வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.

திரும்ப போனாலும், கைல கொஞ்சம், வசூல் பணம் மீதி இருக்கும்ன்னு சொன்னேன். யாரோ இப்பிடியே, தேக்கடி போய் வந்துரலாம்ன்னு ஐடியா சொன்னாங்க. அது எல்லாருக்கும் புடிச்சி போச்சி.

ஆனா, அதுக்கு பணம் பத்தாது, அதனால, தலைக்கு எவ்வளவுன்னு முடிவு பண்ணி எல்லார்க்கிட்டயும் வசூல் பண்ண ஆரம்பிச்சோம், PVP-யும் அழுதுக்கிடே குடுத்தான்.

ஒரு வழியா டூர் முடிஞ்சு, கணக்கு பார்த்தா... கொஞ்சம் இடிக்குது. எல்லாம் ஒழுங்கா எழுதி வைச்சும் கடைசியா இப்பிடி ஆச்சேன்னு ஒரெ வருத்தம். என்ன யோசனை பண்ணியும் கணக்கு வரலை, PVP சும்மா விட மாட்டானேன்னு ஒரு பக்கம் பயம் வேற.

கடைசியா அவனே, உதவிக்கு வந்தான், கணக்கு சீட்டை வாங்கி பார்த்தான், "தேக்கடி போட்டிங் டிக்கேட் மிஸ் பண்ணியிருக்க பாரு"

அதை போட்டதும், உடனே, கணக்கு டேலி ஆச்சு.

கொடைக்கானல்ல ப்ரண்ட் சுகுமார் அடிச்ச கூத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.

Monday, July 13, 2009

ஏய், கொத்து பரோட்டாவும், சிக்கன் 65 - யும் எடுத்து வை.


ஒரு ஆங்கில படம்.

கதை களமும், நடக்கும் சுழழும் அவர்கள் நாட்டிலேயே (ஏதோ ஒரு வெஸ்டர்ன் கன்ட்ரி என்று வைத்துக்கொள்ளுங்கள்) நடக்கிறது.

படத்தில், தாதா வில்லன், கதாநாயகியான தன் வீட்டு வேலைக்காரியிடம், சாப்பாடு கொண்டு வா என்கிறான், எப்படி சொல்லியிருப்பான்?

1. ஏய், சேன்ட்விச்(Sandwich) போட்டு எடுத்து வை.
2. ஏய், கொத்து பரோட்டாவும், சிக்கன் 65- யும் எடுத்து வை.

உங்கள் விடை 1 என்றால், நீங்கள் ரொம்ப சரி. விடை 2 என்றால், நீங்கள் ரொம்ப பெருமை பட்டுக்கொள்ளலாம்.

நீங்களும், ஸ்லம்டாக் மில்லினர், இயக்குனர்(Danny Boyle) மாதிரியே 'அபத்தமாக' சிந்திப்பவர் என்று.

பின்னே? எந்த மும்பாய் வில்லன் சன்ட்விச் சாப்பிடுவான்? கொத்து பரோட்டா, இல்லையென்றாலும், மினிமம், ஒரு ரொட்டி, நான்(Naan) ஏதாவது ஒன்று தான் கேட்டிருப்பான், என்ன சொல்றீங்க?

இந்திய தனத்தோடு, பல அருமையான காட்சிகளை, அமைத்த இயக்குனர் எப்படி இதில் கோட்டை விட்டுட்டார்?

Saturday, July 11, 2009

டேய் கத்தாதீங்கடா....


திருச்சி. ஊரில் மிக முக்கிய குடியிருப்பு பகுதியில் அமைந்தது அந்த நகர்.

அதன் மத்தியில் வெளியே தெரியாத மாதிரி, ஒரு தியேட்டர் உண்டு. அந்த நகர் பெயரும், அந்த தியேட்டர் பெயரும், நல்ல எதுகை மேனையுடன் இருக்கும். நல்ல மலர் பெயர் கொண்ட தியேட்டர். (திருச்சி வாசிகளே, உங்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு? சரி, கடைசியா தியேட்டர் பேரை சொல்றேன்)

இந்த விஷயத்துல பெரிய ஆளு, ப்ரெண்டோட தம்பி.

தியேட்டர் பேரை சொன்னாலே போதும், அங்க பிட் போடுவானா இல்லியா... என்னைக்கு போடுவான், எவ்வளவு நேரம் போடுவான் எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பான்.

அவன் தேதி குறிச்சி சொன்ன ஒரு நாள், எல்லோரும் அந்த தியேட்டரில் ஆஜர், அவனையும் சேர்த்துத்தான்.

படம் ஆரம்பித்து, தியேட்டரில் ஒரே அமைதி.

புருஷனோ பெரிய பிஸினஸ்மேன், டைட்டாக டை(Tie) கட்டிக்கொண்டு ஆபிஸில், வேலை, வேலை...

மனைவியோ எப்போதும் தனியாக படுத்துக்கிடப்பது, ப்ரிஜில் இருந்து தண்ணீர் எடுத்து, மேலே ஊத்திக்கொண்டே குடிப்பது, ஸிம்மிங்கிள் புல்லில் குளித்துக்கொண்டே, பக்கத்து வீட்டு மொட்டை மாடியை பார்ப்பது......

பக்கத்து வீட்டு வாலிபனோ மொட்டை மாடியில் எப்போதும், எக்ஸசைஸ் செய்வது....

இப்படியே படம் ஓடிக்கொண்டு இருந்தது.

இடைவேளை.

எங்க எல்லோருக்கும் ஒரே டென்ஷன்,

"டேய்... என்னடா இது?"

"சும்மா இருங்கண்ணே... இங்க இடைவேளைக்கு அப்புறம் தான்..."

வேறு வழியில்லை, அவன் சொன்னால் சரியாத்தான் இருக்கும். தம் அடித்து முடித்து, கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தோம்.

இரண்டே நிமிடத்தில், ஒரு மூலையில் இருந்து விசில் சத்தம் வந்தது.

"டேய் சத்தம் போடாதீங்கடா..." தம்பி.

சத்தம் அப்படியே பரவி, அதிகரிக்க ஆரம்பித்தது....

"அண்ணே.. இங்க சத்தம் போட்டா, போட மாட்டேண்ணே... " தம்பி பதறினான்.

இன்னும் சில நிமிடத்தில் தியேட்டர் முழுவதும், விசில் சத்தம் பரவி, தியேட்டரே திக்குமுக்காடியது.

"ஐய்யோ... ஐய்யோ..., கத்தாதீங்கடா...போடமாட்டான்டா... டேய் கத்தாதீங்கடா..." தம்பி, கூட்டத்தைப் பார்த்து கதறினான்.

"டேய் கத்தாதீங்கடா... டேய் கத்தாதீங்கடா..."

சத்தம் ஓய்ந்தபாடில்லை, "அண்ணே... இன்னிக்கு அவ்வளவு தான்... போடமாட்டான், வாங்க போவோம்... டிக்கெட் பணம் தண்டம்..." சொல்லிக் கொண்டு நடை கட்டினான்.

நாங்கள் எல்லோரும், அவன் பின்னாடியே நடையை கட்டினோம்.

இடைவேளையில் பார்த்த நண்பரை, ஒரு வாரம், கழித்து பேசிக்கொண்டு இருந்த போது, தெரிந்தது, அன்று கடைசிவரை பிட் போடவில்லை என்று.

தம்பி எப்போதும் சரி தான்.

பின் குறிப்பு: என்னது? தியேட்டர் பேரா? உங்க திருச்சி ப்ரண்டை கேட்டு தெரிஞ்சுகுஙக.

Friday, July 10, 2009

இத்தெல்லாம் டூப்பு - கந்த சாமி காய்ச்சல் - 1


கந்த சாமி மறந்து போன ஒரு சில - இத்தெல்லாம் டூப்பு - இங்கே,

தள்ளு வண்டி, குதிர வண்டி,
சைக்கிளு, மொப்பெட்டு,
பைக்கு, புல்லெட்டு, ரிக் ஷா, ஆட்டோ,
டேக்ஸி, கால் டேக்ஸி,
ஜீப், வேன், டெம்போ,
டவுன் பஸ், பாயின்ட் டூ பாயின்ட்,
ரூட் பஸ், எக்ஸ்ப்ரஸ்,
மொபசலு, ஆம்னி பஸ்,
கார், லாரி, ட்ரக், ட்ரேக்டரு,
ரயிலு, கூட்ஸ் வண்டி, ட்ராலி,
கட்டுமரம், பாய் மரம், போட்,
பேஃர்ரி, கப்பலு, பலூனு,
ப்ளைட், ஹெலிகாப்டரு,
ராக்கெட்டு, ஜெட்டு ...டு...டு...டு

இத்தெல்லாம் டூப்பு
மாட்டு வண்டி தான் டாப்பு
இத்தெல்லாம் டூப்பு
மாட்டு வண்டி தான் டாப்பு
இத்தெல்லாம் டூப்பு
மாட்டு வண்டி தான் டாப்பு...

மூடுவந்தா டூப்பு தொடரும்...

Tuesday, June 30, 2009

ராஜீவ் காந்தி சேது


Sonia inaugurates Bandra-Worli sea link - NDTV News.
"The country's first ever sea link will reduce the travel time ..."

New India sea link bridge opens - BBC News.
"The first bridge to be built over the sea in India has been officially opened in Mumbai by Sonia Gandhi..."

Bandra-Worli Sea Link named Rajiv Gandhi Setu. - இன்டியன் எக்ஸ்பிரஸ்.
மிகவும் நல்ல செய்தி. எவ்வளவு நாட்கள் இழுத்துக்கொண்டு இருந்தது?, எவ்வளவு செலவு அதிகம் ஆனது? எல்லாவற்றையும் விட்டுத் தள்ளுங்கள். இந்தியா முன்னெறிக்கொண்டு இருப்பதற்க்கு இது இன்னும் ஓர் எடுத்துக்காட்டு.

ஆனால், என் மனதை உறுத்தும் ஒரு கேள்வி... இந்தியாவின் முதல் கடல் பாலம், ... முதல் கடல் பாலம் என்கிறார்களே... ஏன்? அப்படி என்றால் இராமேஸ்வரம் பாலத்தை எந்த கணக்கில் சேர்பது?

இந்த செய்தியை, சுதந்திர இந்தியாவில் கட்டிய முதல் கடல் பாலம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது, சுதந்திர இந்தியாவில் கட்டிய முதல் கடல் தொங்கும் பாலம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு எந்த காரணமும் உள்ளதா?

இனையத்தில் தேடியும் சரியான பதில் கிடைக்க்வில்லை. இதை படிக்கும் யாருக்கேனும் விடை தெரியுமா?

Tuesday, June 23, 2009

என் பெட்(BED)-ல் நடிகை


முதல் வேலை காரணமாய் உடுமலைபேட்டையில் இருந்த போது, ஒரு லாட்ஜில் தங்கி இருந்தேன். பெயர் ஞாபகம் இல்லை, ஆனால், அந்த ஊரில் அது கொஞ்சம் நல்ல லாட்ஜ்.

நான் கீழ் ப்ஃளோரில் கடைசியில் உள்ள சிங்கிள் ரூமில் இருந்தேன். 2 மாதம் முடிந்தது, இன்னும் 4 மாதம் இருப்பேன்.

ஒரு நாள் காலை மொத்த லாட்ஜும் காலி பண்ணிக் கொண்டு இருத்தார்கள். 8 மணிக்கு ட்ரைனிங் என்பதால், அவசரத்தில் என்ன ஏது என்று விசாரிக்க வில்லை.

மதியம் தூங்குவதற்க்கு லாட்ஜுக்கு வந்தால், வாசலில்ல் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. செக்யூரிடி லத்தி வைத்து சமாளித்துக்கொண்டு இருந்தார்.

"ஹிரோயின் இப்பத்தான் இந்த பக்கம் போச்சு"

"அது சங்கவி"

"அட, ஏதொ புதுசு மாதிரி தெரியுதுப்பா"

கூட்டத்தை தள்ளிக்கொண்டு உள்ளே போனேன். ரொம்ப நாளாக இருப்பதால், செக்யூரிடிக்கு என்னை நன்றாக தெரியும். உள்ளே விட்டார்.

"என்னப்பா இது?" - நான்

"சார்... மொத்த லாட்ஜும் சினிமா யூனிட் தங்கி இருக்காங்க... நீங்க மட்டும்தான் வெளி ஆளு" - செக்யூரிடி

"படம் பேரு?"

"இராவணனாம்... லியாகத் அலி கான் தான் ஹிரோ"

ரிசப்ஷனிலும் ஒரே கூட்டம். வழக்கமாய் வணக்கம் சொல்லும் மேனெஜர், ரொம்ப பிஸியாக இருந்தார். என்னை பார்க்கக்கூடவில்லை.

என் ரூமுக்கு போய் லாக்கை(LOCK) திறந்தேன், திறக்கவில்லை. உட்பக்கம் மூடி இருந்தது.

"ரூம் பாயா?... வழக்கமாய் 10 மணிக்கு வந்து க்ளீன் செய்து விட்டு போய் விடுவானே..." கதவைத் தட்டினேன், திறந்ததும் தூக்கி வாரி போட்டது.

என் பெட்(BED)-ல் நடிகை.

கதவைத் திறந்த 12 வயது மிக்க சின்ன பெண் என் கண்ணில் படவில்லை, ஸ்லிவ் லஸ், ட்ரான்பரண்ட் நைட்டியில் பெட்டில் படுத்து இருந்த உருவம் தான் பட்டது.

"இது....இது... " - வார்த்தை வரவில்லை. படுத்து இருந்த உருவம் ஒன்றும் பேசவில்லை, திரும்பி ஒரு கோபப் பார்வை உதிர்தது. பார்வையின் அர்த்த்ம், "யார்யா உன்னை இங்க விட்டது?"

"இது என் ரூம்..." - நான்.

"சார் இது ஹிரோயின் ரூம்... போய் மேனேஜரை பாருங்க" 12 வயது கதவை மூடியது.


"சார்... உங்களை 2-வது ப்ஃளொர் சிங்கிள் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிட்டேன். ஹிரோயினுக்கு உங்க ரூம்தான் வேனும்னு கேட்டுக்கிட்டதால வேற வழியில்லை. கொஞ்சம் பொறுத்துக்குங்க..." மேனேஜர்.

"என்னை கேக்காம...எப்படி?..."

"சார்... ஓனர் எல்லோரயும் காலி பண்ண சொன்னார், நான் தான் உங்களுக்காக பேசி சரி பண்ணினேன். திருமூர்த்தி மலையில் மூனு வாரம் ஷூட்டிங். , மொத்த யூனிட்டும் இங்கத்தான் தங்கறாங்க... வேனா... அவிங்க காலி பண்ணதும், உங்களை கீழ கொண்டு வந்திட்றேன். "

ஹிரோ, நாகேஷ், ஜெய்கணேஷ் இந்த மூவர் மட்டும் தான் எனக்கு தெரிந்த முகம். திறையில் தெரியும் உருவங்கள் நம்மை போல் மனிதர்கள் தான் என்று முதலில் உணர்ந்தது அப்போது தான்.

"சார்... உங்க லாட்ஜ்ல தான் எல்லோரும் தங்கி இருக்காங்கலாமே... பேப்பர்ல் பார்த்தேன்" - எப்பொதும் லேட்டாக வரும் STAFF.

"ஆமாம்...சார்..." நடந்த கதையை சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை.
"அது மட்டும் இல்லை, ப்யூனை கூட என்னோடு கூட்டிக்கிட்டு போனேன், அவரும் எல்லோரயும் பார்த்தார்"

"சார்... சார்... நானும், இன்னிக்கு உங்க கூட வரேன்... ஹிரோயினை காட்டுங்க சார்..."

"சார்... நான் வேனா லாட்ஜ்க்குள்ள கூட்டிக்கிட்டு போறேன், அதான் என்னால பண்ண முடியும்...."

"அது போதும் சார்... அது போதும்..." மாலை வீடுக்கு போகாமல் என்னோடு வந்தார்.... வழக்கம் போல் லாட்ஜ் வாசலில் கூட்டம். இந்த முறை செக்யூரிடி என்னையும் தடுத்து நிறுத்தினார்.

"சார் டெய்லி ஒருத்தரை கூட்டிக்கிட்டு வர்றிங்க... மேனேஜர் என்னை திட்றார்... வேன்னா... நீங்க மட்டும் போங்க, வேற யாரயும் உள்ள விடமுடியாது." - என்ன பேசியும் செக்யூரிடியை சரி செய்ய முடியவில்லை.

"அப்புறமா ஒரு நாள் பாத்துக்கலாம் சார்..." ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து அனுப்பினேன். மற்றோரு நாள், லாட்ஜ் மேனேஜரிடம் பேசி அவரை, உள்ளே கூட்டிக்கொண்டு போனேன், ஆனாலும், பாவம், அவரால் கடைசி வரை ஹிரோயினை பார்க்க முடியவில்லை.

பின்குறிப்பு: படம் வெளி வந்த பிறகு தான், ஹிரோயின் சங்கவி இல்லை, அஹானா என்று தெரியும், இன்று வரை படம் பார்க்க வில்லை, ஆனால், சன் டிவி, மிட் நைட் மசாலாவில், ஒரு பாட்டு மட்டும் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

Friday, June 19, 2009

முதல் வேலை


எங்கள் வகுப்பில் முதலில் வேலைக்கு சேர்ந்தது நானாகத்தான் இருக்கும். (அதன் பிறகு இந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு மூன்று வருடம் கழித்தும் வேலை தேடி அலைந்தது மிகப் பெரிய கதை.)

அப்பாவின் சிபாரிசு. அப்பாவின் நண்பரின் அண்ணன், அண்ணா யூனிவர்சிட்டி ரிட்டயர்ட் ப்ரொபசர், அவருடைய கம்பெனி. அப்போதைக்கு கம்ப்யூட்டர் துறையில், அது ஓரளவுக்கு தெரிந்த கம்பெனி தான்.

சிபாரிசு என்றாலும் இன்ட்ர்வியூ(பெயரலவில் தான் என்றாலும், அப்போது, அது எனக்கு தெரியாது).

வியாழன் மதியம், 4 மணி இருக்கும். ரூமுக்குள் அழைத்தார்கள்.

புத்தகம் எழுதிய விஷயத்தை எல்லாம் சேர்த்தும், Resume ஒரு பக்கத்தை தாண்டவில்லை. தாம்பரத்தில் ஏதோ ஒரு கடையில் Electronic Type Writter-ல் அடித்து, Xerox போட்டது.

நீட்டினேன். வாஙகி டேபிள் மீது போட்டவர்(என் வருங்கால மேனெஜர்) அதை பார்க்கக்கூட இல்லை.

உட்கார சொன்னார். Thanks சொல்லி உட்கார்ந்தேன்.

"B.E computer science-அ?"

"யெஸ் சார்"

"சரி. 10 DOS Commands சொல்லுங்க"

"CLS...DIR...DATE... TIME....ம்... ம்... " டேபிளுக்கு கீழே 4 விரல் நீட்டி இருந்தது.

"அப்புறம்?" - என்பது போல பார்த்தார்.

"ம்... CD... MD... RD..." - இப்பொது ஏழு விரல், அப்பாடா இன்னும் மூனு தான்... மூச்சை இழுத்து விட்டேன்.

"ஏதாவது அட்வான்ஸ்டு COMMANDS சொல்லக்கூடாதா?"

"ம்... DEL.." எட்டு விரல். என்ன யோசித்தும் வேறு எந்த COMMAND-ம் ஞாபகம் வரலை.

"இதுதான் அட்வான்ஸ்டு COMMAND-அ?... சரி எங்க தங்கி இருக்கீங்க?"

"பெருங்கழத்தூர்..."

"ஒரு நிமிஷம்..." என் ரெசுமெ-வை எடுத்துக்கொண்டு வெளியெ போனவர் அறை நிமிஷத்தில் உள்ளே வந்தார்.

"மன்டே மார்னிங் வேலைக்கு வந்துருங்க"

"ரொம்ப தேங்க்ஸ் சார்" கைகுலுக்கி தயங்கி நின்றேன், அதை புரிந்து கொண்டு, "அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் எல்லாம் நேராகைல சர்வர்".

மாசம் ரூ. 1500, 'சாப்ட்வர் இம்ப்ளிமெண்டர்', உடனெ ட்ரைனிங் ஆரம்பம். TMB பேங்க்-யை கம்ப்யூட்டர் மயமாக்குவது தான் வேலை. ஒரு மாதம் ட்ரைனிங் கொடுத்து, என்னை நம்பி, உடுமலைபேட்டை TMB பேங்க்-யை கையில் கொடுத்தார்கள்.

ஒரு பக்கம் குஷி, சம்பள்ம் போக, தினம் ரூ.50 தினப்படி. மற்ற செலவு எல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். மறுபக்கம் ஒரெ டென்ஷன். ஏதாவது சொதப்பினால்?

என்ன ஆகிவிடும்? வேலை போகுமா? பார்த்து விடலாம்ன்னு குருட்டு நம்பிக்கை ஒரு ஓரம்.

பயந்த மாதிரி ஏதும் நடக்கவில்லை. எல்லாம் நன்றாகவே போனது. போறாத குறைக்கு இராஜ மரியாதை வேறு. எனக்கு கண்ணாடி ஏஸி அறை, இன்டர்நெட்டும் அப்போது இல்லை. ஒரே பொழுதுபோக்கு SOLITAIRE GAME. விளையாடிக் களைத்து போகாமல் இருக்க, டீ, வடை தவறாமல் இரண்டு வேளை.

இரண்டு 386 SERVER MACHINE-க்கு மத்தியில், உட்கார்ந்து இருக்கும் என்னை, அதிசயமாக, கண்ணாடிக்கு வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் ஒருசில கஸ்ட்டமர்ஸ்.

எப்போதாவது "சார் சார்... DD பிரிண்ட்டர்ல மாட்டிகிச்சி..." மாதிரி கம்ப்ளையன்ட் மட்டும் தான்.

தின்மும் மதிய தூக்கம், மாலை சினிமா, வார கடைசில், கோவை(RC, வெங்கட் ரூம்), பழனி, திருமூர்த்திமலை - னு ஊர் சுற்றல், இப்படியே வாழ்க்கை சுகமாக போனது.

என் ஒரே ப்ராப்ளம், பேங்க் STAFF-க்கு ட்ரைனிங் கொடுப்பது தான்.

8 -லிருந்து 9 வரை ட்ரைனிங், 9 -லிருந்து பேங்க் வேலை, அவர்களுக்கு. 8 -லிருந்து 9 வரை ட்ரைனிங் கொடுப்பது, 9 -லிருந்து SOLITAIRE GAME, எனக்கு. பேங்க் மேனெஜர் மட்டும் இதற்கு விலக்கு, அவர், ஏற்கனவே வேறு ப்ரான்ச்-ல் ட்ரைனிங் முடித்தவர்.

"யாரவது ட்ரைனிங்க்கு சரியா வரலைன்ன சொல்லுங்க" மேனெஜர் என்னிடம் தனியாக சொல்லி வைத்திருந்தார்.

ஒரு STAFF மட்டும் எப்பொதும் ஏதாவது காரணம், சொல்லி வரவே மாட்டார். அவர் தினமும் சொல்லும் காரணமும் நம்பும்படி இருக்கும்.

"சார்... நான் தான் ஸ்கூல்ல விட்னும்ன்னு பையன் ஒரே தொல்லை..."

"மாமியாரை ரயில் ஏத்தி விட லேட்டயிடுச்சு... சார்"

"ஸ்கூட்டர் மக்கர் பன்னிடுச்சு, டவுன் பஸ் புடிச்சு வந்தேன் சார்...."

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேனெஜரிடம் சொல்லிரலாமா? சே...பாவம்... மறுபடி ஏதும் நம்ப முடியாத படி சொன்னால் பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் திரும்பவும், கிளாஸ் முடியும் போது வந்தார். பேண்ட், சட்டை எல்லாம் நனைந்து காய ஆரம்பித்து இருந்தது.

"ஸாரி சார்... வீட்டை விட்டு கிளம்பும் போது, தண்ணி வந்துடுச்சு... இன்னிக்கு விட்டா மறுபடியும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் தண்ணி வரும்...."

பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டேன். கடைசி வரை அவரை பற்றி மேனெஜரிடம் சொல்லவே இல்லை.

Monday, June 15, 2009

கரண்ட் பில் - இரண்டாம் பாகம்

(முதல் பாகம் படிக்கலைன்னா அதை படிச்சிட்டு இங்க வாங்க...)


"ஐயயோ..." னு பதறி போய் நின்னா, சுகுமார் சிரிச்சிக்கிட்டு மேல ஏறி வந்தான். "மச்சி, ஏதோ ஊத்திக்கிச்சு போல..."


"சரி வாங்க வாங்க வெளியே போயிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்..." - ரவி


"ஹும்ம்... விவரம்?" - நான்


"அதெல்லாம் ஆவாதுடி..., D வீட்டுக்கு இப்பவே நாம தான்னு தெரியும்" - சுகுமார்.


புற்றிசல் மாதிரி ஒவோருதரா வெளிய வர ஆரம்பிச்சாங்க. மொத்த அபார்ட்மென்ட்க்கும் விஷயம் தெரிஞ்சு, எல்லோரும் எங்களை சுத்தி நின்னுக்கிட்டு இருந்தாங்க. நாங்க நடுவுல.


மிடில் ஈஸ்ட்-ல கல் எறிஞ்சு சாகடிக்கிரத்தை கேள்வி பட்டிருக்கோம், அதுக்கான ச்விஸுவேஸன்ல தான் அன்னிக்கு நாங்க இருந்தோம். நிஜ கல் வரலையே தவிர, ஒவ்வொரு வார்த்தையும் கல் மாதிரி தான் இருந்திச்சு.


"காலேஜ் பசங்க-ல இதுக்குத்தான் வாடகைக்கு வைக்க கூடாதுங்கரது"

"4 மாச கை குழந்தையை வச்சிகிட்டு பவர் இல்லாம என்ன பன்றது? "

"ஒனரை கூப்பிட்டு சொல்லி, காலி பண்ண வைங்கப்பா..."

"நாளைக்கு சனி கிழமை வேற.... திங்கள் கிழமை தான் எதுவும் செய்ய முடியும்"

கௌரவமான ஒரு சில மட்டும் உதாரணத்திற்கு. நான்கு பக்கம் இருந்தும் வசவு வந்து விழுந்தது.

"வந்து... என்ன ஆச்சுன்னா... எப்படியாவது நாளைக்கு சரி பண்ணிடறோம்...." தயக்கத்தோடு ரவி இழுத்தான்.

"அட, பண்ண்றத பண்ணிட்டு... இது வேறயா? நீங்க சும்மா இருங்கப்பா..."

நாங்க எது சொன்னாலும் கேட்க யாரும் தயாரில்லை.

எங்களுக்கு சப்போர்ட் செய்வது அந்த அப்பார்ட்மென்டில் மொத்தம் நாலு வீடு தான். ரெண்டு அட்கோ ஃபிரண்ட்ஸ், அவிங்களும் வேலைக்கு போயிட்டாங்க. மீதி ரெண்டும் காலி.

கடைசியா கூட்டத்துலயே பெருசு, B அப்பார்ட்மெண்ட், சார்லி செல்லப்பா (நாங்க வச்ச பேரு - ஒரிஜினல் மறந்து போச்சு) ஆரம்பிச்சார். "ஏதோ சின்ன பசங்க பண்ணிட்டங்க.... இப்ப என்ன பண்ணலாம்ன்னு யோசிங்கப்பா..."

எங்களுக்கு அப்பத்தான் உசிரு திரும்பிச்சு. அவரை எப்படியெல்லாம் ஓட்டி இருக்கோம், அவர் தான் கடைசியா எங்களை காப்பாத்தினார். அன்றோடு அவரை ஓட்டுரதை நிறுத்திட்டோம்.

"எனக்கு ஒரு லைன்மென் தெரியும், இங்ஙனத்தான் MIG- ல இருக்கரு. நான் சொல்லிவிட்டா... சனிக்கிழமைக்கூட வந்து பாப்பாரு... ஆன அவரு கேக்கரதை குடுத்துருங்க... லீவு நாள் இல்லியா?" ஏதோ ஒரு புண்ணியவான்.

"அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை... வரச்சொல்லுங்க... ரொம்ப தேங்ஸ்ங்க...." - நாங்க ஒரே கோரஸாக.

இன்னிக்கு ராத்திரி தான் எப்படி போகுமுன்னு தெரியலை" - ஒரு சில முனுமுனுப்பு கேட்டது.

ஒரு வழியாக எல்லோரும் போன பின், எங்களுக்கே நாங்க செய்தது பெரிய தப்புன்னு புரிஞ்ச்து. அதுக்கு பரிகாரமா, பக்கத்து கடையில போய் மெழுகுவர்த்தி வாங்கி ஓவ்வொரு வீட்டுக்கும் ரெண்டு கொடுத்தோம்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல?" அதுக்கும் திட்டு வாங்கியது தனிக்கதை.

ஒரு வழியா சனிக்கிழமை லைன்மென் வந்து தெருக்கம்பத்தில் சரி செய்ய, திங்கள்கிழமை காலேஜ் கட் அடிச்சு, FINE கட்டி, அப்புறமா ஃப்யூஸ் போட்டோம்.

ஆக, மொத்த செலவு,
லைன்மென் - ரூ. 25.
மெழுகுவர்த்தி - ரூ. 20.
FINE & Connection Fee - ரூ. 50.
கரண்ட் பில் - ரூ. 15.

Saturday, June 13, 2009

கரெண்ட் பில் - முதல் பாகம்



மறைமலர் நகர். EWS அப்பார்ட்மென்ட். நான், பன்னைபட்டி ரவி, சுகுமார் மூணு பேரும் ரூம்மெட்ஸ்.

புறா கூண்டு மாதிரி A லிருந்து P வரை 16 வீடு. Floor-க்கு 4 வீடு. நாங்க first Floor- ல G அப்பார்ட்மென்ட்.

சாப்பாடு மாமி மெஸ், பக்கத்துலயே. காலேஜ், ஊர் சுத்தல்னு ஒரே பிசி. காலையில வீட்டை விட்டா ராத்திரி தூங்க மட்டும் தான் கூண்டுக்குள்ள வருவோம்.

ரொம்ப ரொம்ப கம்மியா யூஸ் பண்றதால, கரெண்ட் பில் எப்பவும் மினிமம், ரூபாய் 15 தான்.

"நாய்க்குவேலை இல்லை நிக்க நேரம் இல்லை"ன்னு சொல்லற மாதிரி நாங்க மூணு பேரும் எப்போதும் பிசியா இருப்பதாலே, தவறாம கடைசி நாள்(due date) தவறிடும்.

காலேஜ் கட் அடிச்சு சினிமா போறதோ, சீட்டு கட்டு போடுறதோ, பொத்தேரி பசங்க ரூம்ல துங்குறதோ REALLY WORTH. ஆனா கரண்ட் பில் கட்ட காலேஜ் கட் அடிக்க முடியுமா?

ஒரு நாள் ஓடி ஆடி கூண்டுக்குள்ள வந்து சுவிட்ச் ஆன் பண்ணா லைட் எரியலை.

"சே, தே... புள்ளங்க, ப்யூஸ் புடிங்கிட்டு போய்ட்டாங்க போல ..." - சுகுமார்.

"புடுங்காம?...E.B என்ன உங்க பாட்டன் டிபார்ட்மெண்டா?" - பன்னைபட்டி.

"அப்பவே சொன்னேன்... எல்லாம் உங்களால் தான்..." - நான்.

"நீ என்ன பண்ணே? போய் கட்ட வேண்டியது தானே? சரி… சரி... இப்ப என்ன பண்றது?" - பன்னைபட்டி.

"ராத்திரி 9 மணி, இப்ப ஒன்னும் பண்ண முடியாது... எதுன்னலும் நாளைக்கு தான்" - நான்.

அப்பத்தான் AUDCO - ல வேலை செய்யற தோஸ்த் லோகு, செகண்ட் ஷிபிட், LUNCH BREAK - ல DINNAR -கு வந்திருந்தார்.

"இவ்ளோ தானா விஷயம் ... ஒரு நிமிஷம் ..." ரூமுக்குள்ள போன லோகு, உடனெ வெளியெ வந்தார். "கீழ வாங்க" சொல்லிகிட்டே விறு விறுன்னு கீழே போனார். எல்லோரும் கீழே போனோம்.

எலெக்ட்ரிக் மீட்டர் போர்டு கதவை திறந்து ஒரு தடியான சில்க் வயரை ப்யூஸ் மாதிரி செட் பண்ணினார்.

"அவளோ தான்... திரும்ப E.B.-ல கனெக்சன் குடுக்குற வரை யூஸ் பண்ணுங்க.... ஜாக்ரதை, காலைல வெளிய போகும் போது கழட்டிடுங்க...."

ரூமுக்கு வந்தோம். லைட் எரிஞ்சது.

ராத்திரி ப்யூஸ் போடுவோம், காலைல கழட்டிடுவோம். இப்படியே ஒரு வாரம் பழகி போய், கரண்ட் பில் மறந்து போச்சி.

எப்பவும் நானோ, ரவியோ தான் ப்யூஸ் போடுவோம், அன்னிக்கு வெள்ளிக்கிழமை, மறந்து போய் ரூமுக்கு போய்ட்டோம். கீழ போய் ப்யூஸ் போட சோம்பேரிதனம்.

"என்னால முடியாது .... எவனோ போங்க..." - நான்

"என்னாலையும் முடியாது.... இவன் தான் எப்பவும் போறதில்லை..." ரவி சுகுமாரை கை காட்டினான்.

"ஏய் எனக்கு எப்பிடின்னு தெரியாது... " சுகுமார்

ரவி சாப்பிடுவது போல கை செய்கை காட்டினான்... "இது மட்டும் தெரியும்மா?"

டென்சன் ஆனா சுகுமார் வயரை எடுத்துக்கிட்டு கீழெ போனான்.

"படார்..." - நு ஒரு சத்தம், என்னடான்னு பார்த்தா தெரு கம்பத்துல மின்னல். அடுத்த நொடி அப்பார்ட்மென்ட் மொத்தமா பவர் கட்.

பின்குறிப்பு: கரண்ட் பில், கரண்ட் ஒரு பக்கம் பில் ஒரு பக்கம் படம் சரிதானே? எப்ப்ப்புபுடி?

(தொடரும்)

Monday, June 8, 2009

Professor மகாலிங்கத்தின் ஞாபகசக்தி



Professor மகாலிங்கம், ரொம்ப ஞாபகசக்தி உள்ளவர். எங்களுக்கு CIRCUIT THEORY SUBJECT எடுத்தார்.

செமஸ்டர் ஆரம்பிச்சு சரியா ஒரு மாசம் மட்டும் தான் கைல ATTENDANCE எடுத்துக்கிட்டு வந்தார். அதுக்கு அப்புறம் ATTENDANCE - கு பதிலா வெறும் துண்டுசீட்டு மட்டும் தான்.

கிளாசுல எத்தனை பேர்? அவிங்க ரோல் நம்பர் என்ன? 1-ல ஆரம்பிச்சு 47-வரை எல்லாம் அத்துபடி.

யார் யார் எங்க உட்காருவாங்க, யாரு ரெகுலரா வருவாங்க, யாரு ரெகுலரா மட்டம் போடுறது்? சும்மா சொல்லகூடாது, அத்தனையும் மண்டையில ஏத்தி வச்சிருப்பாரு.

எங்க கிளாஸ் மட்டும் இல்ல, அவர் போற எல்லா கிளாசுக்கும் இதே சங்கதி தான்.

அன்பு செழியன் தான் எங்க கிளாசுல ரோல் நம்பர் 1. அவன் கிளாசுக்கு வர்றதே அபூர்வம்.

சார் ATTENDANCE ஆரம்பிக்கிறப்போ வீனா எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்ன்னு, நேரா நம்பர் 2 - ல இருந்து தான் ஆரம்பிப்பார். நம்பர் 1 துண்டுசீட்டுல ஏறிடும்.

மொத்தம் உள்ள 47 பேர்ல ஏறக்குறைய 35 பேரைத்தான் சமயத்துல கூப்பிடுவாரு. விட்டு போன நம்பர் எல்லாம் துண்டுசீட்ல இருக்கும்.

V.SANKAR (தண்டலை - சாரி சங்கர் மன்னிச்சுடு என்னை, மறுபடியும் நீ தான் கிடைச்சே) ரோல் நம்பர் 24. அவனும் அன்பு செழியன் மாதிரி தான். ஆனா அன்னிக்கு கிளாசுக்கு வந்திருந்தான்.

சார் ATTENDANCE எடுக்க ஆரம்பிச்சார். 2, 3, 4, 5, 6, 7,_,9, 10...... 22, 23,_,25, 26...

"கிளாசுக்கு வந்தும் ATTENDANCE இல்லியா?" டென்ஷன் ஆகிட்டான்.

"சார் ... சார்... என் நம்பர் கூப்பிடலை..." சங்கர்.

சும்மா கைய ஆட்டினார். "உட்காரு உட்காரு" - னு அர்த்தம்.

கடைசியா எல்லா நம்பரும் முடிஞ்சதும் சங்கர் பக்கம் திரும்பினார். "இதுக்கு தான் ரெகுலரா கிளாசுக்கு வரணும்" சொல்லிக்கிட்டே நம்பர் 24 - ஐ ஸ்டிரைக் பண்ணினார்.

நாலு நாள் தொடர்ச்சியா வரலைன்னா அவர்கிட்டபோராடித்தான் ATTENDANCE வாங்கனும்.

கடைசியா ஒரு நாள் மகாலிங்கம் சார் வந்தார், கிளாஸ் எடுத்தார், ATTENDANCE இல்லை, துண்டு சீட்டு இல்லை, PERIOD முடிஞ்சது. கிளம்ப ஆரம்பிச்சார், எல்லோருக்கும் டென்ஷன் என்னதான் நடக்குதுன்னு.

"சார் ATTENDANCE இன்னும் எடுக்கலை" எல்லாரும் ஒரே கோரசாக.

"Don't worry, Absentees are 1,8, 13,24,... " எழெட்டு NUMBER-ஐ சொல்லிடு போய்கிட்டே இருந்தார்.

Shankar. V.T

Friday, June 5, 2009

....CREASE - ஆகும் சார்



மதியம் First Period. Electrical Circuit.

எங்க Department HOD கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சார். எல்லோருக்கும் நல்ல தூக்கம்.

60% Attendance இல்லியான Exam Hall Ticket கிடைக்காது. Fine கட்டி Receipt- டைவேர்ட்ஸ்வத் கிட்ட காண்பிச்சு தலை சொறியனும். இதை avoid பண்ண தான் சிலர் கிளாஸுக்கே வந்திருந்தாங்க. சிலருக்கு Practical மார்க்ஸ் வேனும் அதான் .

போர்டுல ஏதோ Circuit போட்ட படியே HOD question கேட்டார். கிளாஸே அமைதியா இருந்துச்சு. ஒருத்தரும் வாயதிறக்கலை.

ஒருமுறை ஸ்டுடென்ட் பக்கம் திரும்பி கிளாஸை நோட்டம் விட்டார்.

"சரி இந்த question காவது பதில் சொல்லுங்க." - HOD.

எதோ question கேட்டார், மறுபடியம் அதே அமைதி. HOD க்கு டென்ஷன். ரொம்ப நேரம் அட்வைஸ் போட்டார். எதோ ஒரு பாயிண்ட்-ல அவருக்கு சட்டென டென்ஷன் எகிறுச்சு.

இந்த கேள்விக்கு பதில் சொல்லாம நான் அடுத்த சப்ஜெக்ட்-கு போக மாட்டேன். "இந்த stage-ல Voltage என்ன ஆகும்?" - பிளாக் போர்டு-ல இருந்த CIRCUIT-ஐ காண்பிச்சு கேட்டார்.

"நீ ஆரம்பி..."

"INCREASE - ஆகும் சார்" லஷ்மி நரசிமன்.

"எப்படி?"

லஷ்மி எதோ சொன்னான்.

"நோ. நெக்ஸ்ட்" உட்கார போனவனை நிறுத்தினார்.

"உன்னை உட்கார சொல்லலை... நெக்ஸ்ட்"

"DECREASE - ஆகும் சார்" P.V. பார்த்த சாரதி.

"எப்படி?"

PVP சும்மா நின்னான்.

நெக்ஸ்ட் .... நெக்ஸ்ட் .... நெக்ஸ்ட் ... அல்மோஸ்ட் பாதி கிளாஸ் நின்னுகிட்டு இருந்திச்சு.

அடுத்து Sankar V (தண்டலை). அன்னைக்கு மார்னிங் கிளாசுக்கு குட வரலை. "என்னது இது புது தலைவலியா இருக்கே? இதுக்குதான் கிளாசுக்கே வரதில்லை. என்ன சொன்னாலும் நிக்க சொல்றாரே?" தனக்குள்ள முனுமுனுத்தான். அவனுக்கும் ஒரே டென்ஷன்.

"நெக்ஸ்ட்"

"Mm ....CREASE - ஆகும் சார்"

"என்னது?"

"....CREASE - ஆகும் சார்"

"...CREASE ஆகுமா?" HOD சிரிக்க ஆரம்பிச்சார். கிளாஸ் கலகலப்பாச்சு.

எப்படியோ HOD டென்ஷன் போனது, மீதி கிளாஸ் தப்பிச்சது.

நன்றி,

Shankar. V.T.