Friday, August 28, 2009

சர்தார்ஜி ‍ஜோக்ஸ் - 1



வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் ஒரு காட்சி, அதிக பரோட்டா தின்னும் போட்டி. இது நான் பல‌ வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த, ஒரு சர்தார்ஜியின் ஜோக்கிலிருந்து உருவப்பட்டது, ஆனாலும் மக்களால் ரசிக்கும் படி இருந்தது. ஸோ, மக்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சேவை, நான் ரசித்த சில சர்தார்ஜியின் ஜோக்குகளை பகிர்ந்துகிரலாம்ன்னு... கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜோக்குகள் தொடரும்.

ஒரு நாள் ஒரு ல‌ண்ட‌ன் பீச்சில் நம்ம சர்தார்ஜி படுத்துக் கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். சர்தார்ஜியை கடந்து போன ஒருவ‌ர் நம்மாளை பார்த்து கேட்டார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.

கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,

"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"

கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".

சே, இந்த‌ இட‌மே ச‌ரியில்லை, 'ஒரே தொல்லையாக‌ இருக்கு'ன்னு த‌ன‌க்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற‌ இட‌த்துல‌ போய் ப‌டுக்க‌லாம்ன்னு சர்தார்ஜி கிள‌ம்பினார். போகும் வ‌ழியில் இன்னோரு சர்தார்ஜி ப‌டுத்துக்கொண்டிருப்ப‌தை பார்த்தார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த‌ முறை கேள்வி கேட்டது, ந‌‌‌ம்ம‌ சர்தார்ஜி.

"யா..." ப‌டுத்துக்கொண்டிருந்த‌ சர்தார்ஜி.

உடனே, ந‌ம்ம‌ சர்தார்ஜியின் மூளையில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எரிந்த‌து. ப‌டுத்துக்கொண்டிருந்த‌வ‌ரை பார்த்து சொன்னார்,

"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"

*********************************************************************************

ஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. ந‌ம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

சர்தார்ஜியால‌ பொருக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

********************************************************************************

Wednesday, August 26, 2009

கிணறு



சேலத்திலிருந்து தருமபுரிக்கு என் பெற்றோர் குடிபெயர்ந்த நேரம். நான் நான்காம் வகுப்பு, என் அண்ணன்கள் இருவரும் ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். ஏதோ காரணத்திற்காக மதியம் பள்ளிக்கு விடுமுறை. வீட்டிற்க்கு வந்தால், வீடு பூட்டி இருந்தது.

அம்மா மார்கெட் போயிருப்பதாய் பக்கத்து வீட்டில் தெரிந்து கொண்டு, அங்கேயே பையை வைத்து விட்டு, மூவரும் பக்கத்து வயல்களில் தும்பி, பட்டாபூச்சி பிடிக்க கிளம்பி விட்டோம்.

கடைசியில் போய் சேர்ந்தது வயலுக்கு நீர் இரைக்கும், பெரிய இரட்டை கிணறு. சேலத்திலிருந்த வரை இது மாதிரி கிணறையோ வயல்வெளிகளையோ பார்த்ததில்லை, அதில் விளையாடியதில்லை. தண்ணீர் குறைந்து இருக்கும் போது தான் அது இரட்டை கிணறு, நீர் நிறைந்த நாட்களில் அது மிகப் பெரிய கிணறு. இருவர் ஒரு சேர இறங்கி ஏற, கிணறு வெட்டும் போதே பாதை அமைத்து இருந்தார்கள்.

ஒருபக்கம் ஒரு முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் காலியாக இருந்தது. இறங்கினோம், யாருக்கும் நீச்சல் தெரியாது. அண்ணன்களின் பேச்சை கேட்காமல், கைகால் கழுவுகிறேன் என்று, நீருக்குள் முழுகி பாசிபடந்திருந்த கல்லில் கால் வைத்தேன், அது வழுக்கி விட, தலை கீழாக நீருக்குள் விழுந்தேன், அண்ண‌ன்க‌ளின் குய்யோ, முய்யோ க‌த்த‌ல் க‌டைசியாக‌ மெதுவாக‌ கேட்ட‌து.



கண்விழித்து பார்த்த போது, அந்த பெரியவர் என் வயிற்றை அழுத்தி, முதல் உதவி செய்து கொண்டிருந்தார், கிண‌ற்றை சுற்றி மக்கள் கூட்டம். ஒருவர் அண்ணன்கள் இருவரையும், குச்சி வைத்து வெளுத்துக் கொண்டிருந்தார். இருவரும் அழுது கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

"நீச்சல் தெரியாத சின்ன பையனை கிணத்துல தள்ளி கொல்ல பாக்குறீங்க... யார்ரா நீங்க?"

"ப‌க்க‌த்துல‌ தான் புதுசா குடிவ‌ந்திருக்கோம்"

"ப‌க்க‌த்துல‌ன்னா..."

"ந‌டேச‌ க‌வுண்ட‌ர் தெருவுல‌"

"இந்த‌ பைய‌னை ஏண்டா கிணத்துல தள்ளினிங்க‌?"

"எங்க‌ த‌ம்பிதான், விளையாட‌ வ‌ந்தோம், தெரியாம‌ த‌வ‌றி விழுந்துட்டான்"

எல்லாரும் ப‌ள்ளி சீருடை அணிந்திருந்தோம்.

"ப‌டிக்கிற‌ புள்ள‌ங்க‌ளுக்கு கிண‌த்துல‌ என்ன‌ விளையாட்டு? ம‌றுப‌டி உங்களை இந்த‌ ப‌க்க‌ம் பார்தோம், அவ்வ‌ள‌வு தான்.... ஒழுங்கா வீடு போய் சேருங்க" விரட்டிவிட்டார்கள்.

மூவ‌ரும், வெளியே வ‌ந்தோம். 'எல்லாம் இவ‌னால‌ தான், சொன்ன‌ கேட்டா தானே...' ந‌ங்கென்று த‌லையில் ஒரு 'கொட்டு' விழுத்தது, பெரிய‌ அண்ண‌னிட‌மிருந்து.

இப்போது அழுது கொண்டிருந்த‌து நான்.

மொத்த‌மாக‌ ந‌னைந்திருந்தேன், அப்ப‌டியே வீட்டுக்கு போனால், அர்ச்ச‌னையும், த‌ர்மஅடியும் தொட‌ரும், என்ன‌ செய்வ‌து என எல்லோருக்கும் யோச‌னை.

க‌டைசியாக‌ எல்லாரும் ஒரு ம‌ன‌தாக‌ எடுத்த‌ முடிவின் ப‌டி, மொத்த‌ ஆடைக‌ளையும் அவிழ்த்து, நான் ஒரு ம‌‌ர‌த்த‌டியில் ஒழிந்து கொள்ள‌, செடிகளின் மீது காய‌வைத்து மறுபடியும் போட்டுக்கொண்டு வீடுவ‌ந்து சேர்ந்தோம்.

வெற்றிக‌ர‌மாக‌ உண்மையை வீட்டில் ம‌றைத்து உல‌விக்கொண்டிருந்த, அடுத்த இரண்டாவது நாள், எங்க‌ள் குட்டு வீட்டில் க‌ழ‌னித‌ண்ணீர் எடுக்க‌ வ‌ந்தவ‌ளின் மூல‌ம் வெளிப‌ட்ட‌து.

எங்களை எங்க‌ள் வீட்டில் வைத்தே பார்த்த‌ அவ‌ர், 'ஏம்மா இந்த‌ புள்ளைங்க‌ உங்க‌ புள்ளைங்க‌ளா... அஞ்சு நிமிசம் விட்டிருந்தா, அன்னிக்கு, இந்த சின்ன புள்ள செத்திருக்கும்...' என ஆரம்பித்து எல்லாவற்றையும் என் அம்மாவிடம், போட்டு கொடுத்து விட்டு போய்விட்டார்.

என்ன நடக்க போகிறதோ என் ப‌ய‌ந்த என‌க்கு அம்மாவிட‌மிருந்து எந்த‌ எதிர்வினையும் வராதது அப்போது பெரும் சந்தோஷம். ஆனால், அவ‌ருடைய‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கி இருந்ததற்கான அர்த்தம், அப்போது புரியவில்லை. ஒரு குழ‌ந்தைக்கு த‌ந்தையான‌ பின்பு இப்போது புரிகிற‌து.

அடுத்த வாரத்தில், ப‌க்க‌த்து வீட்டு மாமாவிட‌ம் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்ள‌ ஏற்பாடான‌து. அதன் பிறகு, ப‌ட‌த்தில் உள்ள‌து போல‌ ப‌ம்புசெட்டு ரூம் மேல் ஏறி கிண‌ற்றில் குதித்து விளையாடிய‌ நாட்க‌ள், இப்போதும் ப‌சுமையாக‌ நினைவில் இருக்கிறது.

மறக்காம பின்னூட்டம் போடுங்க சாமியோவ்...

Tuesday, August 25, 2009

'நோகாமல் நொங்கு தின்ன' - டாப் 10 வ‌ழிக‌ள்

ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை ஊர் மக்கள் மடக்கி பிடித்ததாகவும், சம்மந்தபட்ட புண்ணியாவான், ஊர் மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்க்கு சில காந்தி நோட்டுக்களை அள்ளி தெளித்து தொழிலை மக்கள் ஆசியுடன் தொடர்வதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.



தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் விட மாட்டான்னு, சும்மாவா சொன்னாங்க? இடைதேர்தலில் பணம் வாங்கி பழகிபோன நம்ம பொதுஜனம், இப்படி மணல் கொள்ளையர்களிடம், கல்லா கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.



இடைதேர்தல் வராத, ஆறு இல்லாத ஊர்காரர்கள், நோகாமல் நொங்கு தின்ன என்ன வழி? ஸோ, கிழ்க்கண்ட பத்து பேரை அனுகினால் ஒரு வேளை நொங்கு கிடைக்கலாம்.

1. வீரப்பன் இல்லியானாலும், அவனைத் தொடர்ந்து மரம் வெட்டி பிழைப்பவர்கள்.
2. மோனேபோலி 'டாஸ்மார்க்'குக்கு எதிராக‌ சொந்த‌மா காய்ச்சி ஊர‌ல் போடுப‌வ‌ர்க‌ள்.
3. ரேஷ‌ன் அரிசியை ப‌க்க‌த்து மாநில‌த்துக்கு க‌ட‌த்துப‌வ‌ர்க‌ள்.
4. ஏரி, குள‌ங்க‌ளை ஆக்கிர‌மித்து, பிளாட் போடும், ரிய‌ல் எஸ்டேட் கார‌ர்க‌ள்.
5. நிலம், குள‌ம் குட்டைக‌ளை தொழிற்சாலை க‌ழிவுக‌ளால் நாற‌ அடிக்கும் தொழில‌திப‌ர்க‌ள்.
6. ம‌க்க‌ளுக்கு பொதுவான‌ நில‌த்த‌டி நீரை அனும‌தியில்லாம‌ உறிஞ்சி பாக்கெட் போட்டு விற்ப‌வ‌ர்க‌ள்.
7. அநியாய‌மா ந‌ன்கொடை வ‌சூலிக்கும், க‌ல்வி த‌ந்தைக‌ள்.
8. குழந்தை தொழிலாள‌ர்க‌ளை வேலைக்கு வைக்கும், தொழில‌திப‌ர்க‌ள்.
9. மருவை, 'கேன்சர்' என்று ஆபரேஷன் செய்து தண்டல் வ‌சூலிக்கும் 'ஒரு சில' மருத்துவமனைகள்.
10. திடீர் என உருவாகி கோடிகளில் புரளும், சொகுசு சாமியார்கள்.

மேலே உள்ள எந்த குப்பனும், சுப்பனும் வாய்க்காத பரிதாபபட்ட ஊர் காரர்களே, உங்களுக்கான ஒரேவழி, உங்கள் ஊர் எம்.எல்.ஏ அல்லது எம்.பி எதுவும் செய்யவில்லைன்னு போராட்டம் நடத்தி இராஜினாமா பண்ண வைக்கலாம். இடைதேர்த‌ல் வ‌ருமில்ல‌?

பின்குறிப்பு 1: நொங்கு தின்ன‌ ஆசைப‌ட்டு எவரும் மேற்குறிப்பிட்டவர்களை த‌னிம‌னித‌னாக‌ அனுக‌ வேண்டாம், அப்புற‌ம், நீங்க‌ளே நொங்கு ஆக‌ வேண்டிய‌து தான்.

பின்குறிப்பு 2: 'நொங்கு' என்ற தலைப்பில், கூகுளிட்டபோது கிடைத்த படங்களில், பொருந்திய இருபடங்கள் உங்கள் பார்வைக்கு.

பிடிச்சிருந்தாலும், திட்டுறதானாலும் மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

Monday, August 24, 2009

விநாயகர் சதுர்த்தியும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் - பகிரங்க கடிதம்

விநாயகர் சதுர்த்திக்கும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் என்ன சம்பந்தம்? இப்படி தேவையில்லா கேள்வி கேட்பவருக்காக, தொலைக்காட்சி முன் தவம் இருக்கும் தொல்ஸின்(தொல்காப்பியனின்) அதிரடி பகிரங்க கடிதம்,



சன் டிவி - சிவா மனசுல சக்தி. விநாயகரின் தந்தை சிவா, தாய் சக்தி. சிவா மனசுல சக்தி இருப்பதால், விநாயகர் உதயம். இது போதாதா? 'பார்வதியின் அழுக்கு உருண்டை தான் விநாயகர்' என விதன்டாவாதம் பேசுபவர்களே, அழுக்கு உருண்டையானாலும், விநாயகரை தன் மகனாக ஏற்றுக்கொண்டவர் தான் சிவா, ஸோ, இந்த கேள்வியே அர்த்தமில்லாதது.



சன் டிவி - கஜினி. டைரக்டர் முருகதாஸ், ஹிரோ சூர்யா சிவக்குமார் என எல்லோரும், கனேஷின் தம்பியான முருகனின் பெயர் கொண்டவர்கள். ஒரிஜினல், முகம்மது கஜினியே பதினேலுமுறை படையெடுத்து, கடைசியில் கொள்ளையடித்தது, கனேஷின் தந்தையான சிவன் கோவிலில் தானே?



சன் டிவி - ஸ்பைடர் மென். வேறு ஒரு ஜீவராசியின் தலையை தன் தலையாக கொண்ட விநாயகரின் பிற‌ந்த நாளைக்கு, முழுவதும் வேறு ஜீவராசியின் குணநலன்களுடன் மாறும் ஹிரோவின் படத்தை விட வேறு எந்த படம் பொருந்தும்?

ஜெயா டிவி - டிஷ்யும். படத்தின் ஹிரோ ஜீவா. இவருடைய உண்மையான பெயர் 'அமர் சௌத்திரி'. அமர் யார்? சிவன். சிவன் யார்? விநாயகரின் அப்பா. வேறேன்ன வேண்டும்?



கலைஞர் டிவி - பில்லா. உலக அளவில் இந்த படத்தை வினியோகம் செய்தது, 'ஐங்கரன் இன்டர்நெஷனல்' தான். அது மட்டும் இல்லை, இப்ப‌ட‌த்தில் ந‌டித்துள்ள‌ 'செக்கூரிடி' பிர‌புவின் முழு பெய‌ர் 'பிர‌பு கனேச‌‌ன்' என்ப‌தை தெரிவித்துக் கொள்கிறேன். ப‌ட‌ ஹிரோ, விநாய‌க‌ரின் த‌ம்பியான‌ முருக‌னை ப‌ற்றி பாட‌ல் பாடுவ‌தை நினைவு கூற‌ விரும்புகிறேன்.



கலைஞர் டிவி - சரோஜா. சரோஜா என்றால் என்ன? தாமரை. யூ நோ, ஆல் காட்’ஸ்(GOD’S) ஆல் டைம் ஃபேவரிட் ஃப்ளவர் இஸ் லோட்டஸ், இன்குலிடிங் லார்ட் கனேசா. விநாயகர் தாமரையில் உட்கார்ந்திருக்கும் படமே சாட்சி.



கலைஞர் டிவி - சற்று முன் கிடைத்த தகவல். ப்ப்பா...இப்பவே கண்ண கட்டுதே... அட போங்கப்பா, ஏதோ ஒரு சம்பந்தம் இல்லாமலா, படம் போடுவாங்க? நீங்களே ஆராய்ச்சி பண்ணிக்கோங்க.

இப்படிக்கு,
தொலைக்காட்சி தொல்ஸ்.

மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

Sunday, August 23, 2009

கந்தசாமி


ஸ்ரேயா, கிருஷ்ணா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், வெளி நாட்டு காட்சிகள், ஒரு பிட் ஸாங் இது போதாதா? தெலுங்கில் படம் ஓட வாய்ப்பிருக்கிறது.

இது ஒன்றுதான் தயாரிப்பாளர், கலைப்புலி தானு அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம். மற்றபடி ஆளவந்தானில் படுத்தவரை, படுத்த படுக்கையாக மாற்ற சுசி கணேஷன் போட்ட திட்டத்தில் ஓரளவிற்க்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

கதையாவது புதிதா என்றால், அதுவுமில்லை, இந்தியனை சுட்டு எடுத்த ரமணா, சிவாஜி மாதிரியான படங்களை சுட்டு, கொத்து பரோட்டா போட்டிருக்கிறார்கள்.

வடிவேலுவா அது? சகிக்கவில்லை, இவர் இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால், விவேக்கை விடுங்கள், கஞ்சா கருப்பு போன்றவர்கள் ஓவர்டேக் பண்ணி போய்க்கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒரு காட்சியில் உருட்டு கட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொள்வார், பார்ப்பவர்களுக்கும் அதே மாதிரி பண்ணிக்கொள்ளலாம் போலிருக்கிறது.

சி.பி.ஐ டைரக்டராக வரும், கிருஷ்ணாவின் வாயை உற்று பார்த்து தொலைத்து விட்டதால், அவர் தெலுங்கு பேசுவது போலவே ஒரு பிரம்மை.

பிரபுவிற்க்கு செக்கூரிடி வேலையிலிருந்து ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது.

விக்ரம் உழைத்து இருக்கிறார், ஆனால், அவருக்கு பீமாவில் பிடித்த சனி, கந்தசாமியை கடந்து இராவனா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது போலும், ஒவ்வோரு படமும் இரண்டு வருடம் செய்தால் ஏற்கனவே வயதானவரை ரசிகர்கள் "முன்னாள்" ஆக்கிவிடுவார்கள்.

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதும், விக்ரம் வில்லன்களிடம் உண்மையை சொல்கிறார், அப்பாடா சீக்கிரம் முடிந்து விடும் என்று மனதை தேற்றிக்கொண்டால், மெக்ஸிகோ, புது வில்லன் என கந்தசாமி பார்ட் 2 ஆரம்பித்து விடுகிறார்கள், போதுமடா சாமி.... ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளம்... தாங்க முடியவில்லை. ஸ்ரேயாவின் உடைகளுக்கு கத்திரி போட்டவரிடம் படத்தை கொடுத்திருந்தாலாவது, படத்தை 'சின்ன'தாய் பண்ணியிருப்பார்.

'முடி இல்லாதவன் மூளை காரன்னு நிருபிச்சிட்டடா' என வடிவேலு ஒரு வசனம் பேசுவார், சுசி கனேஷனுக்கு முடி நிறைய இருக்கிறது.

'ரெண்டு வாரம் பொறுத்தா நல்ல பிரிண்டு 'நெட்'ல வந்துரும்' சொன்ன நண்பரை மதிக்காமல், ஒரு டிக்கெட்டுக்கு 15 டாலர் கொடுத்து, குடும்பத்தோடு போன எனக்கு, ஒரே ஒரு ஆறுதல், மினியாபோலிஸில் உட்கார்ந்து கொண்டு உடனே விமர்சனம் போடமுடிந்தது தான்.

ஆகஸ்ட் முடிந்ததும் திரும்ப வரலாம்ன்னு இருந்தேன், ப்ரேகிற்க்கு ப்ரேக் போட வைத்த கந்தசாமிக்கு நன்றி. மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

Monday, August 3, 2009

ப்ரேக்


ப்ரேக்.

படித்துவிட்டு உடனே பின்னூட்டம் இடும் பிரபு, சங்கா போன்றோருக்கும், போனில் விமர்ச்சிக்கும், நௌசாத், கே.கே போன்றோருக்கும், எந்த ரியாக்க்ஷனும் காட்டாமல் தொடர்ந்து படித்த ராஜா, பாலா, ராம், ராகேஷ் போன்றோருக்கும் நன்றிகள் பல.

"உருப்படியான காரியம் பண்ணின" என் நினைக்கும் மற்றும் பலருக்கும், ஏதோ என்னாலான சின்ன உதவி.

இப்படிக்கு,

சங்கர்