Thursday, January 25, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 9

ஹாத்துவேயின் முடிவுக்குப்பின் டியேகோ வால்கியூஸ் அவனது ஸ்டெயிலில், கொஞ்சம் கொஞ்சமாக கியூபாவை முழுமையாக ஆக்கிரமித்தான்.

பணத்திற்காக ஸ்பெயினிலிருந்து புதிய உலகை நோக்கி வந்த ஐரோப்பியர்கள் கியூபாவிலும் குவிய ஆரம்பித்தார்கள். முதலில் வந்தவர்கள் அத்தீவில் வாழ்ந்த அனைத்து செவிந்தியர்களையும் ஏற்கனவே அடிமைகளாக வைத்திருந்த படியால், புதியவர்களுக்கு அடிமைகள் கிடைக்கவில்லை. ஒருசிலர் ஒரு கிராமம் முழுக்க இருந்த அடிமைகளுக்கு உரிமையாளர்களாகவும், ஒருசிலர் அடிமைகளே இல்லாமலும் இருந்தது, வந்தேரிகளுக்குள் பல குழப்பத்தையும், சிறு கலவரங்களையும் உருவாக்கியது.

அடிமைகள் கிடைக்காத அதிருப்திகாரர்கள் ஒன்றிணைந்து தங்கள் அதிகார வரம்பை விரிவு படுத்தவும், புதிய அடிமைகளை தேடியும், கியூபா தீவை சுற்றியிருக்கும் நிலப்பரப்பை கண்டறிந்து ஆக்கிரமிக்கும் நோக்கோடு ஒரு புதிய திட்டம் தீட்டி, கவர்னரான டியேகோ வால்கியூஸின் ஒப்புதலுக்கு அனுப்பினார்கள். அப்படி பயணம் மேற்கொண்டால் வரும் லாபத்தை பங்கு போட்டுக்கொள்ளும் முறை மீது கவர்னருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்தான் கவர்னர் வால்கியூஸ். ஒருவழியாக அதிருப்திக்காரர்களின் தொடர் முயற்சியின் மூலமாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கு பிரித்தலில் உடன்பாடு ஏற்பட்டு, தானே கப்பல் கட்டும் செலவை ஏற்று கொள்வதாக கூறி அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தான். அந்த குழுவும் மூன்று கப்பல்களில் 110 பேருடன் மேற்கு நோக்கி பயணத்தை துவங்கியது. 1517-ல் புறப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கி நடத்தி சென்றது பிரான்சிஸ்கோ ஹெர்னாண்டஸ் என்பவன்.

இதற்கிடையில் 16-ம் நூற்றாண்டின் முதல் பத்து வருடத்தில் ஸ்பானியோலாவிலிருந்து நாலாபுறமும் புது உலகை மேலும் கொள்ளையடிக்க, பலரின் தலைமையில் பல குழுக்கள் பயணங்களை மேற்கொண்டது.

அவ்வாறு சென்றவர்கள் சில இடங்களில் ஸ்பானிய காலனியை அமைத்தார்கள். இன்றைக்கு Darién Gap எனபடும் வட மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் வடக்கில் ஒரு குழுவும் (இன்றைய தெற்கு பனாமா) தெற்கில் ஒரு குழுவும் (இன்றைய வடக்கு கொலம்பியா) செட்டில் ஆனது. தீவுகள் அல்லாது முதன் முதலில் மெயின் லேண்ட் எனப்படும் அமெரிக்க கண்டத்தில் நகரம் உருவாக்கப்பட்டது இந்த பகுதியில் தான். தெற்கு குழுவின் தலைவனான வாஸ்கோ நூன் டி பல்போவா தான் பசுபிக் பெருங்கடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியவனும் ஆவான். [அதற்கு முன் அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கம் தான் ஆசியாவின் கிழக்கு கடல் பகுதியாக இருப்பதாக நம்பினார்கள், Darién Gap மற்றும் பசுபிக் பெருங்கடல் பற்றி தனியாக பார்ப்போம்] ஆனால் இந்த வடக்கு மற்றும் தெற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்குள் சதா சண்டை. இந்த சண்டைப்பற்றி தலைமைக்கு தெரிவிக்க வால்டிவியா என்பவனின் தலைமையில் ஒரு குழு ஸ்பானியோலாவிற்கு புறப்பட்டது. அவர்களின் கெட்ட நேரம் அப்பயணக்கப்பல் புயலில் சிக்கி பாறைகளில் இடித்து சேதமடைந்து இன்றைய ஜமாய்க்கா என்னும் தீவில் கரை ஒதுங்கியது. அதில் தப்பியவர்கள் இருபது பேரும், ஆபத்து காலத்தில் தப்பிக்க கப்பலில் கொண்டு செல்லும் சிறு படகில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள். சிறிய படகு, சரியான துடுப்புகள் இல்லை, தண்ணீர் இல்லை, உணவுப்பொருட்கள் இல்லை, அதன் விளைவாக வழியிலேயே இன்னும் சிலர் இறக்க, அந்த படகு கற்றடித்த திசைக்கு அலைகழித்து, இன்றைய மெக்ஸிகோவின் யுகேடன் என்னும் தீபகற்பத்தில் கடைசியில் கரை ஒதுங்கியது.

அங்கிருந்த மக்கள் ஸ்பானியோலாவில் இருந்த மக்களை போல் அல்லாது சற்று நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தார்கள். புகழ் பெற்ற மாயன் நாகரீகத்தின் எஞ்சியவர்கள். போர்குணம் கொண்டவர்கள். கொரில்லா முறையில் தாக்குதல் புரிவதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக சிதறிக் கிடந்தாலும், நாகரீகமுறை ஒன்றாகத்தானிருந்தது. அவர்களுக்குள் பிரிவு சண்டைகள் சர்வ சாதாரணம். (தலைத்தோங்கி இருந்த மாயன் நாகரீகத்தை பற்றியும் ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே அது எப்படி அழிந்து போயிருக்கலாம் என்பது பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்).

யுகேடனில் கடற்கரையில் சிறு படகில் கரை ஒதுங்கியவர்கள் மொத்தம் 12 பேர் மட்டுமே! அங்கு வாழ்ந்த ஒரு மாயன் பிரிவினர் அவர்களை பிடித்து தலைவனின் முன் நிறுத்த, தலைவனின் ஆணைப்படி ஊர் திருவிழாகோலம் பூண்டது. விழாவின் முடிவில் தங்கள் தெய்வத்திற்கு நன்றி சொல்லி, கேப்டன் வால்டிவியா உட்பட ஆறு பேரை பலியிட்டு அவர்களின் உடல்கள் ஊர் முழுக்க விருந்தாக வினியேகிக்கப்பட்டது.

அதில் மிகவும் மெலிந்து காணப்பட்ட ஜெரோனிமோ டி அகிலார் மற்றும் 5 பேரையும் விருந்தாக்குவதை அவர்கள் கொழுக்கும் வரை தள்ளிப்போடலாம் என முடிவானது. அதுவரையிலும் தங்களின் அடிமைகளாக இருக்கட்டுமே என தங்களுடன் வைத்து கொண்டார்கள்.

சிறிது நாட்கள் கழித்து அடிமையாக இருந்த ஜெரோனிமோ டி அகிலார்-ம் இன்னொருவனும், அந்த பிரிவினரிடமிருந்து தப்பி அவர்களின் எதிரிப்பிரிவின் தலைவனிடம் தஞ்சம் அடைந்தார்கள். அங்கு அவர்களின் தலை தப்பித்தது ஆனால் அங்கும் அடிமையாகத்தான் வாழ்க்கையை தொடர முடிந்தது. அந்த தலைவனுக்கு உண்மையாவனாக நடந்த கொண்டு, அங்கிருந்த ஒரு மாயன் குலப்பெண்ணையே மணந்து அவர்களின் மொழிகளை நன்கு அறிந்து, முழு நேர செவ்விந்தியனாக மாறிப்போனான் ஜெரோனிமோ டி அகிலார். இவன் தான் மெயின் லேண்டை ஆக்கிரமிக்க கியூபாவிலிருந்து பின்னாளில் வந்த ஆக்கிரமிப்பாளர்களின் முக்கிய மொழிபெயர்ப்பாளனாக இருந்தான்.

இந்த மொழி பெயர்ப்பு தான், செவ்விந்தியரிடம் முதலில் புரிந்து கொண்டு நட்பு பாராட்டவும், பின்பு அவர்களின் பிரிவுகளுக்குள் பிரிவினை அதிகரிக்கவும், கடைசியில் மொத்தமாக அனைவரையும் ஆக்கிரமிக்கவும் பேருதவியாக இருந்தது.

Saturday, January 13, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 8



இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி வரலாற்று புத்தகத்தில் படித்திருப்பீர்கள் தானே... சுற்றிலும் மதில் சுவரால் ஆன மைதானத்தில் கூடிய மக்களை, எல்லா வழிகளையும் அடைத்து விட்டு ஒரே ஒரு வாயிலை மட்டும் திறந்து விட்டு, அதில் வெளியேறியவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு பொசுக்கிய கோர படுகொலை நிகழ்ச்சி. அதை நடத்தியவன் ஜெனரல் டையர் என்பவன். தகவல் தொடர்பு இருந்த காலத்தில் நடந்த இது உலகிற்கு நன்றாக தெரியும்.

தகவல் தொடர்பு இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் கூண்டோடு அழிக்க பட அல்லது எஞ்சிய சிலர் எழுத்தறிவு இல்லாமல் இருந்தால், என்னவாகும்? இது போன்ற ஒரு நிகழ்வை நடத்திய ஜெனரல் டையரே அதைப்பற்றி பெருமையாக எங்காவது குறிப்பிட்டால் தான் உலகிற்கு தெரியும்.

செவ்விந்தியர்களுக்கு நேர்ந்தது இது தான். அக்காலத்தில் புதிய உலகம் பல ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் பார்த்திருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் அம்மாதிரியான நிகழ்வில் பங்கேற்ற ஸ்பானியர்களின் குறிப்பிலிருந்து கிடைத்தவை மட்டுமே. செவ்விந்தியர்களுக்கு பல மொழிகள் இருந்ததே தவிர எழுத்து இல்லை. அதனால் பல இன அழிப்பு சம்பவங்கள் வரலாற்றில் இடம் பிடிக்காமல் போய் விட்டது. உலகுக்கு தெரிந்த ஒரு சில சம்பவங்களும் கூட ஸ்பானியர்கள் பார்வையில் உலகிற்கு வெளிகாட்டப்பட்டவை தான். அதுவே இவ்வளவு குரூரமாக இருக்கிறதே, உண்மையில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஹாத்துவே(Hatuey):



ஹெட்டி மற்றும் டோமினிக் ரிபப்ளிக் இணைந்த தீவை கொலம்பஸ் ஸ்பானியோலா(Hispaniola) என்று பெயரிட்டு, ஸ்பெயின் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது முன்பே பார்த்தோம்.

அந்த தீவை ஸ்பானியர்கள் முமுவதுமாக ஆக்கிரமித்த போது, அத்தீவின் ஒரு பகுதியின் தலைவனாக இருந்த ஹாத்துவே அங்கிருந்து தப்பிச்சென்று கியூபாவில் தஞ்சம் அடைந்தான். அங்கிருந்த தன் இன மக்களிடம் ஸ்பானியோலாவில் நடக்கும் கொடுமைகளை எடுத்து சொல்லி, அது மிகவிரைவில் கியூபாவிலும் நடக்கும் அதனால் ஸ்பானியர்களை எதிர்க்கவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தினான்.

Batolome De Las Casas எனும் பாதிரியாரின் கூற்றுப்படி, ஹாத்துவே கியூபாவிலிருந்த தன் இனமக்களிடம் இருந்த தங்கத்தை காட்டி சென்னது இதுதான்:

“தங்கம் தான் ஸ்பானியர்கள் வழிபடும் கடவுள். இதற்காகத்தான் அவர்கள் சண்டையிடவும், கொல்லவும் செய்வார்கள். நம்மை அடிமைகளாகவும் ஆக்குவார்கள், அதனால், இவற்றை கடலில் எறிந்து விடுங்கள். அந்த மிருகங்களின் பேச்சு, அவர்களின் அமைதியான கடவுளை பற்றியதாகவும், எல்லோரும் சமம் என்றும் இருக்கும், ஆனால் உண்மையில் நம் மண்ணிலேயே நம்மை அடிமையாக்குவார்கள். பரிசுத்த ஆன்மாவை பற்றி, சொர்கத்தை பற்றி, நரகத்தை பற்றி பேசுவார்கள், முடிவில் நம் உடமைகளை கொள்ளை அடிப்பார்கள், நம்மின பெண்களை கற்பழிப்பார்கள், நம் பெண்குழந்தைகளிடம் கீழ் தரமாக நடந்து கொள்வார்கள். நம் கண்ணியத்திற்க்கும், விவேகத்திற்க்கும் ஒருகாலத்திலும் சமமாகாத அவர்கள், நம்முடைய ஆயுதத்தால் உடைக்க முடியாத இரும்பினாலான கவசத்தை அணிந்திருப்பார்கள்"

உண்மையில், பேச்சு வேறு அனுபவம் வேறல்லவா? இப்பேச்சை கேட்ட ஒரு சிலர் மட்டுமே ஹாத்துவே பக்கம் சென்றார்கள், ஆனால் பெரும்பாலனவர்கள் உண்மையை அறியாததால், அப்பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹாத்துவேயும் தன்னுடன் இணைந்த 400 பேருடன் கொரில்லா போருக்கு ஆயுத்தமானான்.

இன்னிலையில் கிரிஸ்டோபர் கொலம்பஸின் மகன் டியேகோ கொலம்பஸ் ஸ்பானியோலாவின் நான்காவது கவர்னராக பெறுப்பேற்றுக் கொண்டான். அவன் டியேகோ வால்கியூஸ் என்பவனை கியூபாவை ஆக்கிரமிக்க அனுப்பினான்.

300 படை வீரர்களுடன் கியூபாவின் கடற்கரையில் வந்திறங்கிய டியேகோ வால்கியூஸ், அங்கிருந்த மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் சந்திக்கவில்லை. அதனால் அவனால் கியூபாவில் நிரந்தரமாக இருக்க முடிந்தது. கியூபாவில் கோட்டை அமைத்து நகரத்தை நிர்மானிக்க எதிர்ப்பு காட்டியது ஹாத்துவே மட்டுமே, அவ்வப்போது அவன் நடந்திய கொரில்லா தாக்குதலால் நான்கைந்து ஸ்பானியர்கள் இறக்க நேர்ந்தது. ஆனால் பெரியதாக ஒன்றும் ஆகவில்லை.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு வால்கியூஸும் அவனது படையும் வந்த போது, அவர்களை வரவேற்று உண்ண உணவும் விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து வரவேற்றனர் அம்மக்கள். உணவை உண்டவுடன், வால்கியூஸ் ஆணைப்படி அனைவரையும் சுற்றி வளைத்து, வாளாலும் துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தினார்கள் அவனது வீரர்கள்.

அமைதியானவர்களை தாக்கவேண்டாம் என நான் சொன்னது யாரும் கேட்கவில்லை. அன்றைய தினம் மட்டும் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட ஆன்மாக்கள் அமைதியானது, இரத்தம் ஆறாக ஓடியது, எஞ்சியவர்கள் அடிமையாக்க பட்டார்கள், என்னால் ஏதும் செய்யமுடியவில்லை என Las Casas குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவில் வால்கியூஸ் சென்ற இடம் எல்லாம் இத்தகைய கொடூரம் தான் நடந்தது. இதனால் அவனால் ஸ்பான்யோலாவை விட வேகமாக கியூபாவை ஆக்கிரமிக்க முடிந்தது. அங்கு மக்கள் தொகையும் அதிகம் என்பதால் அடிமைகளும் நிறைய கிடைத்தார்கள். தங்க சுரங்களிலும், கரும்பு தோட்டத்திலும் வேலை செய்ய மனித சக்தி நிறைந்திருந்ததால், பணமும் நிறைய கிடைக்க ஆரம்பித்தது. (உலகின் சர்க்கரை கிண்ணமாக கியூபா மாறவும் இதுவே அடிப்படை) இதனால், தலைகனம் தலைக்கேற தன்னை கியூபாவிற்கு அனுப்பிய டியேகோ கொலம்பஸுக்கு அடிபணியாமல், நேரடியாக ஸ்பெயினில் உள்ள மன்னனுக்கு கீழ் வந்து, கியூபாவின் கவர்னராக ஆகிவிட்டான். போதாகுறைக்கு ஸ்பெயின் மன்னனின் அனுமதியுடன், ஸ்பானிஸ் பேசும் ஆப்பிரிக்க அடிமைகளையும் இறக்குமதி செய்து கொண்டான். இதை போன்று தலைவனை எதிர்த்து, தான் தோன்றி தனமாக செயல் படும் குணம், அவனுக்கே பின்னாளில் ஆப்பு வைக்கும் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. எப்படியோ, அக்காலத்தில் பணத்தாசையில் ஸ்பெயினிலிருந்து வந்த வீரர்களிலேயே, அவன் தான் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தான்.

இதற்கிடையே, மூன்று ஆண்டுகள் குடைச்சல் கொடுத்து வந்த ஹாத்துவேவை வேட்டை நாய்கள், மற்றும் போராசை பிடித்த உள்ளூர் அடிமைகளின் உதவியுடன் கைது செய்தான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இம்முறை பொது இடத்தில் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்ல முடிவானது.

மரத்தில் கட்டப்பட்டிருந்த ஹாத்துவேவிடம் ஒரு மத குரு வந்தார். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் இதோ:

"இறப்பதற்கு முன்பு உனக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கிறேன்"

"எதற்கு?”

"கிருத்துவனாக இறந்தால், சொர்கத்திற்கு செல்லலாம்.”

“அப்படியானால், ஸ்பானியர்கள் இறந்தால் எங்கு செல்வார்கள்?"

“சந்தேகம் என்ன? சொர்கத்திற்க்கு தான்...”

"நான் நரகத்திற்கே போகிறேன், கொடுரமான ஸ்பானியர்களுடன் சொர்க்கத்தில் இருப்பதை விட நரகத்தில் இருப்பது சால சிறந்தது.” ஹாத்துவே தயக்கமின்றி உடனே உதிர்த்த வார்த்தைகள்.

நம்முடைய கடவுளுக்கும், நம்பிக்கைக்கும் நம்மினத்தவர்கள் சம்பாதித்து கொடுத்த பெயர் இதுதான் என வருத்தப்படுகிறார் இந்த குறிப்பெழுதிய மதகுரு.

தீ படர்ந்தது, ஒரு நாயகன் உருவானன்.

ஹாத்துவே இன்றைக்கும் கியூபா வரலாற்றில் முதலில் போர்கொடி உயர்த்திய மாவீரனாக போற்றப்படுகிறான்.

பி.கு.1.: என் பார்வையில் ஹாத்துவேவிற்க்கும், சே குவாராக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இருவரும் கியூபா நாட்டை சேராதவர்கள், ஆனால் கியூபா நாட்டினரால் போற்றப்படும் மாபெரும் வீரர்கள்.

பி.கு.2: ஜியோகிரபியில் கொஞ்சம் வீக்கானவர்கள் மேலே உள்ள வரைபடத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த கட்டுரை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகும்.

தொடரும்....

Tuesday, January 9, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 7

அரசி அனகோனா('தங்க மலர்') :

கரீபியன் தீவுகளின் கியூபாவிற்கு அடுத்து இரண்டாவது மிக பெரிய தீவாக இருப்பது, இன்றைய ஹெட்டி மற்றும் டொமினிக் ரிபப்ளிக் நாடுகள் இணைந்த தீவு. அது ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கு தலைவர்களும் இருந்தார்கள். அதன் ஒரு பகுதியின் தலைவனைத்தான் (சில வாரங்களுக்கு முன் பார்த்தோமே) ஸ்பானியர்கள், ஒரு பளபளப்பான கைகால் விலங்கைக்காட்டி, இது அரசர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன், எனக்கூறி கைது செய்து ஸ்பெயின் கொண்டுபோனார்கள்.

அத்தலைவனின் பெயர், caonoba, கப்பல் ஸ்பெயின் போய் சேரும் முன், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். ஸ்பானிய அரசு அவர்களின் காலனியை அம்மண்ணில் அமைக்க எதிர்ப்பு காட்டியதால் அவரை கைது செய்ததாக கூறிக்கொண்டது.

அம்மன்னனுக்கு பிறகு அவரது மனைவியான Anacaona அந்நாட்டின் அரசியாக பதவி ஏற்று கொண்டாள். பெரும்பாலான தீவை ஸ்பானியர்கள் ஆக்கிரமித்த பின்னும், ஒரு சிறு பகுதி மட்டும் அனகோனாவின் ஆட்சியின் கீழ் இருந்தது.

அனகோனா என்றால், அவர்களது மொழியில் தங்க மலர் என்பதாகும். பெயருக்கு ஏற்றார் போல், அவளும் மிகச்சிறந்த அழகி. அதுமட்டுமில்லாது, நடனத்திலும், பாடல் இயற்றுவதிலும், சிறந்து விழங்கினாள். பொதுவாக செவ்விந்தியர்கள் அவர்களின் பெயரை இயற்கையையும், விலங்கினங்களின் பெயரையும் உவமையையும் கலந்து வைப்பார்கள். தாக்கும் ஓனாய், வலிமையான எருது, அழகிய நிலவு, உயர்ந்த மரம், பளபளக்கும் ஒளி, வசந்த காலம், வானவில், சீரும் பாம்பு, மிகசிறியவன், ஆளுமையானவன் இதைப்போன்று தான் இருக்கும் அவர்களின் பெயர்கள். 'தங்க மலர்' (Anacaona) கூட அந்த வகையை சேர்ந்தது தான். கணவரின் கைதுக்கு பிறகு எஞ்சிய சிறு பகுதியை அவள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தாள்.

செவ்விந்தியர்களிடம், கொலம்பஸூக்கு பின் வந்தவர்களும் அதைவிட கொடூரமாகத்தான் நடந்து கொண்டார்கள். Nicolas De Ovando என்பவன் கொலம்ஸுக்கு பின் வந்த கவர்னரில் ஒருவன், பன்மடங்கு வெறி கொண்டவன். செவ்விந்தியர்களை அடிமையாக மட்டுமே பார்க்க தெரிந்தவன், அவனால் அடிமைகள் ஆட்சியில் இருப்பதை சகிக்க முடியவில்லை. அனகோனாவிடம் தந்திரமாக சமாதானம் பேசினான். தன்னுடைய கணவனின் கைதுக்கு பிறகும், அவள் ஸ்பானியர்களை எதிரிகளாக பார்க்காமல், சமாதான பேச்சுக்கு சம்மதித்தாள். தன்க்கு கீழ் இருந்த 8 தலைவர்களையும் அழைத்து பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.

பெரிய கூடாரத்தில், சமாதான பேச்சும் விருந்தும் கோலாகலமாக தொடங்கியது. பாதி விருந்தில் ஓவண்டோ(Ovando) வின் ஆட்கள், கூடாரத்தை சுற்றி வளைத்து தீயிலிட்டு தரைமட்டமாக்கினார்கள். முன்னமே திட்டமிட்டதால் ஸ்பானியர்கள் அனைவரும் தீயிலிருந்து தப்பி ஓடி விட, செவ்விந்தியர்கள் அனைவரும் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அதையும் மீறி தீயிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தவர்களை சுற்றியிருந்த ஸ்பானியர்கள், தங்களின் வாளுக்கு இறையாக்கினார்கள். சமாதானம் பேச வந்து, அனைத்து தலைவர்களையும் ஓரிடத்தில் சேர்த்து, தீயிட்டும், வாளால் வெட்டியும் அனைவரின் கதையையும் முடித்தார்கள்.

அரசி அனகோனாவை மட்டும் கொல்லாமல், கைது செய்து ஓவண்டோ முன் நிறுத்தினார்கள். ஸ்பானியரின் காலனி விரிவாக்கத்தை எதிர்த்தது தான் இந்நிகழ்விற்கும் காரணம், என விளக்கமளித்தது அவர்கள் உருவாக்கிய கோர்ட். கைது செய்யப்பட்ட அனகோனாவை உயிருடன் மன்னித்து விட ஒரு கடைசி வாய்ப்பு கொடுப்பதாக கூறினான் ஓவண்டோ. ஆட்சியை விட்டு விட்டு, யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல், ஸ்பானியர்களுக்கு மட்டும் பணி புரியும் பாலியல் அடிமையாக இருக்க ஒப்புக்கொண்டால், விடுதலை செய்வதாக அவளுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தீர்ப்பை எதிர்த்தாள் அவள். அதனால் எதிர்ப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டி, அனகோனாவை அனைவரின் முன்னிலையில் பொதுவெளியில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். அப்போது அவளுக்கு 29 வயது மட்டுமே!

உயிரை விட மானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவளின் செயல், இன்றைய ஹெட்டி (Haiti) மற்றும் டாமினிக் ரிபப்ளிக் (Dominic Republic) நாட்டு வரலாற்றில் அனகோனாவிற்கு ஒரு முக்கிய இடத்தை பிடித்து கொடுத்து விட்டது. நாம் கண்ணகியை கொண்டாடுவதை போல போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஹெட்டியர்கள்.

மாவீரன் ஹென்றிக்குல்லோ:

அந்த பலரின் உயிரை குடித்த தீசூவாலைகள் அடங்கியபின் அந்த சாம்பலில் நின்றிருந்த சிறுவன் தான் ஹென்றிக்குல்லோ. அனகோனாவின் சகோதரன் மகன், தன் தந்தை மற்றும் தாத்தாவின் உயிரை குடித்த, அத்தையை தூக்கிலிட்ட ஸ்பானியர்களில் ஒரு நற்குணம் கொண்ட பாதிரியார் ஒருவரின் கண்ணில் அவன் பட, அவர் அவனை கிருத்துவனாக மாற்றி அவனுக்கு ஹென்றிகே என பெயர் மாற்றி வளர்த்து வந்தார்.

ஸ்பானியர்களுடன் வளர்ந்து வந்தாலும் அச்சிறுவனின் மனதில் தன் குடும்பத்தை நெருப்பில் இட்டு அழித்த வந்தேறிகளின் நம்பிக்கை துரோக செயல் பசுமரத்தாணி போல என்றும் நிறைந்திருந்தது. வளர்ந்த பின் லூசியா என்னும் செவ்விந்திய பொண்ணை மணந்து குடும்பதை நடத்த ஆரம்பித்தான். வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிந்த அக்காலத்தில், அப்போதைய அரசின் புதிய சட்டம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

நிலம் வைத்திருக்கும் ஸ்பானியர்கள், அந்த நிலத்தில் வாழும் ஸ்பானியர் அல்லாதவரை தங்கள் அடிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் அச்சட்டத்தின் சுருக்கம்.

ஒவ்வொரு ஸ்பானியரும் பல கிராமங்களை தங்களின் கீழ் வைத்திருந்ததால், ஹென்றிகேவை அவன் குடும்பத்தோடு வெனிஸூலா என்பவனின் அடிமையாக மாற்றியது அச்சட்டம். வெனிஸூலாவின் கரும்புத்தோட்ட தொழிலாளியாக மாற்றப்பட்டான். சொன்னபடி கேட்டவில்லையெனில் தண்டனைகள் கடுமையானதாக இருக்கும்.

மரங்களில் தொங்கவிட்டு சாட்டையடி கொடுத்து மூர்ச்சையானதும், அப்படியே ஒரு இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலை தோட்ட வேலைக்கு அனுப்புவார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே! இது போல இன்னல்கள் பல விதம். தங்கள் அடிமையை அடையாளம் கொள்ள, முதலாளிகள் மாடுகளுக்கு இடுவதை போல தங்களுக்கென்று தனி முத்திரையை அடிமைகளின் உடலில் பதிப்பார்கள். அடிமைகளுக்கு பிறக்கும் குழந்தைகளும், அந்த முதலாளிகளுக்கு அடிமைகள் தான்.

அடிமைகள் இந்த கொடுமைகளை எதிர்த்து போராட அச்சட்டத்தில் இடமில்லை. பல முறை தட்டி கேட்டு, அதற்கான தண்டனையை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்த ஹென்றிகே வெகுண்டெழுந்தது, முதலாளி வெனிஸூலா அவன் மனைவி லூசியாவை கற்பழித்த பிறகு தான். அதன் பின்னர், தன்னை போல பாதிக்க பட்ட தன் இனத்தவர் சிலருடன் தப்பி சென்று, அருகில் இருந்த மலைகுகைகளில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

மலையின் உச்சியில் உள்ள குகைகளில் குழுந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்களை இருக்க செய்து விட்டு, ஹென்றிகேவும் இளம் வயதினரும் அவர்களுக்கு பாதுகாப்பாக உச்சிக்கு செல்லும் பாதைகளில் உள்ள குகைகளில் தங்கி தங்கள் இனைத்தை பாதுகாத்தார்கள். பாதைகளில் பெரிய பாறைகளை கொண்டு மூடிவிட்டு அங்கேயே காவல் காத்த படியால் ஸ்பானியரால் அவர்களை நெருங்க கூட முடியவில்லை.

பெண்கள் கோழி பண்ணை வைத்து, உருளை கிழங்கை பயிருட்டு, தன் இனத்தவரின் உணவு தேவையை பார்த்து கொண்டார்கள். ஸ்பானிஸ் அரசு தப்பிஓடியவர்கள் அனைவரும் போராளிகள் என முத்திரை குத்தி, அவர்களை பிடிக்க பல வழிகளில் முயன்றது. ஆனால் அந்த காட்டு மலைகளை நன்றாக தெரிந்திருந்து கொரில்லா முறையில் யுத்தம் செய்த வீரர்களிடம், ஸ்பானிய படை பல முறை அடிபட்டு உயிருக்கு பயந்து பின்வாங்கி ஓடியது.

மரத்தால் ஆன கம்பு, வேல்கள், மற்றும் மீன் எலும்புகள் போன்ற சிறு ஆயுதங்களை வைத்திருந்த, எண்ணிக்கையிலும் மிக சிறிய படையை வைத்திருந்த ஹென்றிகே ஸ்பானிய படைகளுக்கு 14 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக விளங்கினான். தங்கள் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே ஸ்பானிய படை வீரர்களை கொல்லலாம் என்றும், பழிதீர்க்க வேண்டி யாரையும் கொல்ல வேண்டாம் எனவும் தங்கள் வீரர்களுக்கு ஆணையிட்டிருந்தான். ஒருமுறை போரின் போது, தன் முதலாளியான வெனிஸூலா சிக்கிக்கொண்டான், தன்னை கொடுமை படுத்திய, தன் மனைவியை கற்பழித்த அந்த பாதகனைக்கூட உயிருடன் மற்ற போர் வீரர்களுடன் சேர்த்து விடுவித்து விட்டான். அது தான் செவ்விந்தியரின் உயர்ந்த குணம்.

பல முறை போரில் படு தோல்வி அடைந்து அவமான பட்ட அரசு, அவனை போரில் வெல்ல முடியாது என முடிவு செய்து சமாதானத்தை கையிலெடுத்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. சமாதான பேச்சு வார்த்தையின் போது தன் தந்தையை நெருப்பில் பறி கொடுத்த ஹென்றிகே, இம்முறை அரசை நம்பத்தயாரில்லை.

ஒவ்வொரு இரவும் தானே முக்கிய வழிதடங்களை விடியும் வரை காவல் காத்து அதிகாலையில் மட்டுமே மற்ற வீரர்களிடம் பாதுகாப்பு பணியை ஒப்படைத்து தூங்க செல்வான் ஹென்றிகே.

மேலும் நான்கு ஆண்டுகள், சமாதான பேச்சுக்கு ஒத்துக்கொள்ளாதவன், தன்னை குழத்தையாக இருந்த போது காப்பாற்றிய பாதிரியாரின் மூலம் தூது விடவும் கடைசியில் ஒப்புக்கொண்டான்.

பாதிரியாரின் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஸ்பானிய அரசு கடைசியில் அடி பணிந்தது. தன்னை நம்பி வாழும் தன் இனத்தவர் 4000 பேருக்கும் சுதந்திரமாக வாழ எந்த தடையும் இருக்ககூடாது என்ற ஹென்றிகேவின் வேண்டுகோளை அரசு ஏற்றுக்கொண்டது. அவர்களின் 14 ஆண்டு கால போராட்டமும் முடிவுக்கு வந்தது.

இன்றைக்கும் ஹென்றிகே ஒரு மாவீரனாக போற்றப்படுகிறான். கால போக்கில் அந்த 4000 பேரும் அவர்களின் சந்ததியருக்கும் என்ன நடந்தது என்று வரலாற்றில் சரியான குறிப்புகள் இல்லை, ஆனால் ஹென்றிகேவிக்கு பின் வந்த நூற்றாண்டில், அந்த தீவில் வாழ்ந்த செவ்விந்ததிய இனம் முற்றிலுமாக அழிந்து விட்டதாக கணக்கெடுப்பில் உள்ளது.

தொடரும்....

Tuesday, January 2, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 6

கொலம்பஸ் ஆட்சியின் முக்கிய வேலை தங்கச்சுரங்கம் தோண்டுவதும், கப்பலை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்து தீவுகளுக்கு சென்று அடிமைகளை பிடிப்பதும், அந்த நிலபரப்புகளை ஸ்பானிஸ் அரசாங்கத்தின் வட்டத்திற்குள்ளே கொண்டுவருவதும் தான்.

அவற்றில் சில தீவுகள் மனித இனம் அது வரை கால் பதித்திராதவை. அது போன்ற ஒரு தீவில் ஷீல்கள் மற்றும் கடல் சிங்கங்கள் மட்டுமே நிரம்பி வழிய அவற்றை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள் ஸ்பானிய வீரர்கள். அந்த அப்பாவி ஜீவன்கள் செய்த பாவம், செவ்விந்தியர்களைப் போல் அவ்வீரர்களின் வரவைக்கண்டு பயந்து ஓடாமல் அல்லது அவர்களை வரவேற்காமல் இருந்தது மட்டுமே. அந்த அளவிற்கு குரூர குணத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்கள்.

எல்லாருக்கும் தங்கம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது, ஆனால் அத்தீவுகளில் பெரிய அளவிற்கு தங்கம் ஏதும் கிடைக்கவில்லை, கிடைத்த சிறிய அளவு தங்கத்தையும், ஸ்பெயினுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். விவாசயம் போன்ற தொழில் செய்து, பொருள் உற்பத்தி செய்ய ஆட்கள் இல்லை. விளைவு, உணவு பற்றாக்குறை! பஞ்சம்!!! ஸ்பெயினிலிருந்து கொண்டுவந்த பொருட்களும் தீர்ந்து போக, பஞ்சம் தலைவிரித்து ஆடியது, ஸ்பானிய வீரர்களுக்கிடையே உணவுக்காக கலவரம் ஆரம்பித்தது.

அதனால், அட்மிரல் கொலம்பஸ் திருப்பவும் ஸ்பெயின் சென்று, காலனி அமைதியாக தொடர அதனை விரிவாக்கம் செய்ய மேலும் நிறைய பொருளுதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தான். ஸ்பானிய அரசுக்கு இம்முறை முற்றிலுமாக சம்மதமில்லை, ஆயினும் போர்ச்சுகீசிய அரசும், புதிய உலகத்திற்க்கு ஆள் அனுப்ப தயாராகி விட்டதால், ஆரம்பித்த வேலையை ஒழுங்காக நடத்த வேண்டி, போர்ச்சுகீசியரை விட முன்னனியில் இருக்க வேண்டி, மூன்றாம் முறையும் பொருட்கள், வீரர்களை ஏற்பாடு செய்து, கொலம்பஸை புதிய கப்பல்களில் வழியனுப்பியது.

ஆனால் இரண்டாம் முறை ஆரம்பித்த பஞ்சம் அதன் தொடர்ச்சியாக உண்டான வன்முறை எல்லாம் மிகவும் மோசமான நிலையை அடைந்து, தொடர்ந்து கொண்டிருந்தது.

அங்கே பல கசாப்புக்கடைகளில், செவ்விந்தியரின் உடல்கள் நாய்களின் உணவாக கிடைப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.

Roque Martín என்பவன் வைத்திருந்த நாய் பண்ணையில் அவற்றின் உணவிற்காக எப்போதும் நான்கைந்து செவ்விந்தியரின் உடல்கள் மாட்டிறைச்சியை தொங்க விடுவதைப்போல தலைகீழாக தொங்கவிடபட்டிருந்தது என குறிப்புகளில் உள்ளது.

செவ்விந்தியர்களை நரமாமிசம் உண்ணும் cannibals என குறிப்பிட்ட ஐரோப்பியர்கள், பஞ்சத்தின் போது, அந்த செவ்விந்தியர்களின் மனித இறைச்சி உண்டு வளர்ந்த போர் நாய்களை தங்களின் உணவாக உட்கொண்டார்கள் என்பது தான் உண்மை.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதும், கடைசியில் விழித்துக்கொண்ட ஸ்பெயின் அரசு Francisco de Bobadilla என்பவனை ஆட்சியில் அரமவைத்து கொலம்பஸை கைது செய்தது. புதிய அட்மிரல் இத்தனைக்கும் காரணமான கொலம்பஸையும் அவன் இரு தம்பிகளையும் சங்கிலியில் இணைத்து, கப்பலேற்றி அனுப்பி வைத்தான்.

ஸ்பெயின் வந்தடைந்ததும், அங்கு நடந்த கலவர குற்றங்களை காரணம் காட்டி, அந்நாட்டு அரசு அவனை சிறையில் அடைத்தது. இங்கு முக்கியமாக கவனிக்க பட வேண்டியது, அந்த தண்டனை செவ்விந்தியருக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்காக அல்ல, கலவரம் உருவாகவும், கலவரத்தால் உண்டான ஐரோப்பியரின் உயிர் இழப்பிற்க்காகவும் தான்.

சிறைதண்டனை வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே. சிறை தண்டனைக்குப்பின்னும், ஒரு வழியாக அரசை சமாதானப்படுத்தி நான்காவது முறையாக பயணம் மேற்கொண்டான். ஆனால் அவன் முதலில் காலடி வைத்து, நிர்மானித்த Hispaniola நகரில் அவன் கப்பலை யாரும் அனுமதிக்கவில்லை. அதனால் உயிருக்கு பயந்து இன்றைய கியூபாவின் ஒரு பகுதியாக இருக்கும் தீவில் தஞ்சம் அடைந்து, புயலில் சிக்கி சீரழிந்து, உடல் நலம் குன்றி வேறு வழியின்றி ஸ்பெயின் திரும்பி தன்னுடைய கடைசி காலத்தை கழித்தான்.

ஆனால், அவன் பற்ற வைத்த நெருப்பு அடுத்த 500 ஆண்டுகளுக்கு கொளுந்து விட்டு எரிந்தது.

இத்தகைய கொடுங்கோலனின் நினைவாக அவன் வழி வந்தவர்கள் அவனை அமெரிக்க ஹீரோவாக உருவகப்படுத்தி, 1930 லிருந்து 1934 வரை அன்றைய அமெரிக்க அரசியலில் செல்வாக்கை உபயோகித்து 'கொலம்பஸ் தினம்' எனும் அரசு விடுமுறை தினத்தை உருவாக்கினார்கள்.

பள்ளி பாடங்களில் அவனை ஒரு ஹீரோவாகத்தான் இன்றைக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் பெயரில் ஒரு பெரு நகரமும், பல சிறு ஊர்களும் பல மாகாணங்களில் உள்ளது.

Howard Zinn's A People's History of the United States எனும் புத்தகத்தை படித்து பார்த்தால் கொலம்பஸின் உண்மை முகம் விளங்கும். Howard Zinn -யை தொடர்ந்து பல ஆய்வாலர்கள் தங்களின் புத்தகங்களில், அவனின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

அதனால் சில ஆண்டுகளாக (குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளுக்குள் என்று தான் சொல்ல வேண்டும்), சொற்பமே இருக்கும் செவ்விந்தியரின் வம்சாவழியினரும், சில அமெரிக்க நகரங்களும், மேற்கிந்திய தீவு நாடுகளில் சிலவும், கொலம்பஸ் தினத்தை வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாட்களில் செவ்விந்தியர் தினமாக கொண்டாடுகிறது.

கொலம்பஸிடமிருந்து பதவி எற்று கொண்டவனும் அவன் பின் வந்தவர்களும் கூட லேசு பட்டவர்கள் கிடையாது. செவ்விந்தியர்களிடம் கொலம்பஸுக்கும் மேலே கொடூரமாக தான் நடந்து கொண்டார்கள்.

புதிய உலகத்தை அப்போதைய போப் அப்போதைய சூப்பர் பவராக இருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லுக்கு பிரித்து கொடுத்து உத்தரவிட்டார். அதன்படி இன்றைய பிரேசில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போர்ச்சுகல்லுக்கும், கொலம்பஸ் கண்டறிந்த பகுதிகள் மற்றும் அதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஸ்பெயினுக்கும் என முடிவானது. அதனால் அன்றைய சூப்பர் பவர்களுக்குள் புதிய உலகத்தால் கொஞ்சகாலத்திற்கு சண்டை வராமல் சமாதானமாக இருந்தது.

இவ்விரு நாடுகள் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளும் பல தடவை பயணம் செய்து ஒட்டு மொத்த வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தங்களின் காலனியாக அறிவித்தது. இதில் ப்ரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா குறிப்பிட தக்க அளவு பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தது.

[ரஷ்யா தான் ஆக்கிரமித்து வைத்திருந்த அலாஸ்காவை சொற்ப காசுக்கு அமெரிக்காவிற்கு விற்ற கதை பின்னால் நடந்தது. இன்றைக்கு வட மற்றும் தென் அமெரிக்காவில் பல நாடுகள் உள்ளன. ஆனால அவை பிரிவதற்கு முன் ஒட்டு மொத்தமாக இரு கண்டங்களாக இருந்த போது, அந்த நிலபரப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல விதமான போர்கள் நடந்தேறியது. இவற்றை பற்றி தனி தொடர் எழுதலாம், அதுவும் பேராசையால் இரத்தமும் உயிரும் இழந்த கதைகள் தான். நேரமும் வரவேற்பும் இருந்தால், இத்தொடரை தொடர்ந்து அந்த கதையை எழுதுகிறேன்].

கொலம்பஸ் காலத்திற்க்கு பிறகு நடந்த கொடூரங்கள் வரும் வாரங்களில்....