Tuesday, January 2, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 6

கொலம்பஸ் ஆட்சியின் முக்கிய வேலை தங்கச்சுரங்கம் தோண்டுவதும், கப்பலை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்து தீவுகளுக்கு சென்று அடிமைகளை பிடிப்பதும், அந்த நிலபரப்புகளை ஸ்பானிஸ் அரசாங்கத்தின் வட்டத்திற்குள்ளே கொண்டுவருவதும் தான்.

அவற்றில் சில தீவுகள் மனித இனம் அது வரை கால் பதித்திராதவை. அது போன்ற ஒரு தீவில் ஷீல்கள் மற்றும் கடல் சிங்கங்கள் மட்டுமே நிரம்பி வழிய அவற்றை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள் ஸ்பானிய வீரர்கள். அந்த அப்பாவி ஜீவன்கள் செய்த பாவம், செவ்விந்தியர்களைப் போல் அவ்வீரர்களின் வரவைக்கண்டு பயந்து ஓடாமல் அல்லது அவர்களை வரவேற்காமல் இருந்தது மட்டுமே. அந்த அளவிற்கு குரூர குணத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்கள்.

எல்லாருக்கும் தங்கம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது, ஆனால் அத்தீவுகளில் பெரிய அளவிற்கு தங்கம் ஏதும் கிடைக்கவில்லை, கிடைத்த சிறிய அளவு தங்கத்தையும், ஸ்பெயினுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். விவாசயம் போன்ற தொழில் செய்து, பொருள் உற்பத்தி செய்ய ஆட்கள் இல்லை. விளைவு, உணவு பற்றாக்குறை! பஞ்சம்!!! ஸ்பெயினிலிருந்து கொண்டுவந்த பொருட்களும் தீர்ந்து போக, பஞ்சம் தலைவிரித்து ஆடியது, ஸ்பானிய வீரர்களுக்கிடையே உணவுக்காக கலவரம் ஆரம்பித்தது.

அதனால், அட்மிரல் கொலம்பஸ் திருப்பவும் ஸ்பெயின் சென்று, காலனி அமைதியாக தொடர அதனை விரிவாக்கம் செய்ய மேலும் நிறைய பொருளுதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தான். ஸ்பானிய அரசுக்கு இம்முறை முற்றிலுமாக சம்மதமில்லை, ஆயினும் போர்ச்சுகீசிய அரசும், புதிய உலகத்திற்க்கு ஆள் அனுப்ப தயாராகி விட்டதால், ஆரம்பித்த வேலையை ஒழுங்காக நடத்த வேண்டி, போர்ச்சுகீசியரை விட முன்னனியில் இருக்க வேண்டி, மூன்றாம் முறையும் பொருட்கள், வீரர்களை ஏற்பாடு செய்து, கொலம்பஸை புதிய கப்பல்களில் வழியனுப்பியது.

ஆனால் இரண்டாம் முறை ஆரம்பித்த பஞ்சம் அதன் தொடர்ச்சியாக உண்டான வன்முறை எல்லாம் மிகவும் மோசமான நிலையை அடைந்து, தொடர்ந்து கொண்டிருந்தது.

அங்கே பல கசாப்புக்கடைகளில், செவ்விந்தியரின் உடல்கள் நாய்களின் உணவாக கிடைப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.

Roque Martín என்பவன் வைத்திருந்த நாய் பண்ணையில் அவற்றின் உணவிற்காக எப்போதும் நான்கைந்து செவ்விந்தியரின் உடல்கள் மாட்டிறைச்சியை தொங்க விடுவதைப்போல தலைகீழாக தொங்கவிடபட்டிருந்தது என குறிப்புகளில் உள்ளது.

செவ்விந்தியர்களை நரமாமிசம் உண்ணும் cannibals என குறிப்பிட்ட ஐரோப்பியர்கள், பஞ்சத்தின் போது, அந்த செவ்விந்தியர்களின் மனித இறைச்சி உண்டு வளர்ந்த போர் நாய்களை தங்களின் உணவாக உட்கொண்டார்கள் என்பது தான் உண்மை.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதும், கடைசியில் விழித்துக்கொண்ட ஸ்பெயின் அரசு Francisco de Bobadilla என்பவனை ஆட்சியில் அரமவைத்து கொலம்பஸை கைது செய்தது. புதிய அட்மிரல் இத்தனைக்கும் காரணமான கொலம்பஸையும் அவன் இரு தம்பிகளையும் சங்கிலியில் இணைத்து, கப்பலேற்றி அனுப்பி வைத்தான்.

ஸ்பெயின் வந்தடைந்ததும், அங்கு நடந்த கலவர குற்றங்களை காரணம் காட்டி, அந்நாட்டு அரசு அவனை சிறையில் அடைத்தது. இங்கு முக்கியமாக கவனிக்க பட வேண்டியது, அந்த தண்டனை செவ்விந்தியருக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்காக அல்ல, கலவரம் உருவாகவும், கலவரத்தால் உண்டான ஐரோப்பியரின் உயிர் இழப்பிற்க்காகவும் தான்.

சிறைதண்டனை வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே. சிறை தண்டனைக்குப்பின்னும், ஒரு வழியாக அரசை சமாதானப்படுத்தி நான்காவது முறையாக பயணம் மேற்கொண்டான். ஆனால் அவன் முதலில் காலடி வைத்து, நிர்மானித்த Hispaniola நகரில் அவன் கப்பலை யாரும் அனுமதிக்கவில்லை. அதனால் உயிருக்கு பயந்து இன்றைய கியூபாவின் ஒரு பகுதியாக இருக்கும் தீவில் தஞ்சம் அடைந்து, புயலில் சிக்கி சீரழிந்து, உடல் நலம் குன்றி வேறு வழியின்றி ஸ்பெயின் திரும்பி தன்னுடைய கடைசி காலத்தை கழித்தான்.

ஆனால், அவன் பற்ற வைத்த நெருப்பு அடுத்த 500 ஆண்டுகளுக்கு கொளுந்து விட்டு எரிந்தது.

இத்தகைய கொடுங்கோலனின் நினைவாக அவன் வழி வந்தவர்கள் அவனை அமெரிக்க ஹீரோவாக உருவகப்படுத்தி, 1930 லிருந்து 1934 வரை அன்றைய அமெரிக்க அரசியலில் செல்வாக்கை உபயோகித்து 'கொலம்பஸ் தினம்' எனும் அரசு விடுமுறை தினத்தை உருவாக்கினார்கள்.

பள்ளி பாடங்களில் அவனை ஒரு ஹீரோவாகத்தான் இன்றைக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் பெயரில் ஒரு பெரு நகரமும், பல சிறு ஊர்களும் பல மாகாணங்களில் உள்ளது.

Howard Zinn's A People's History of the United States எனும் புத்தகத்தை படித்து பார்த்தால் கொலம்பஸின் உண்மை முகம் விளங்கும். Howard Zinn -யை தொடர்ந்து பல ஆய்வாலர்கள் தங்களின் புத்தகங்களில், அவனின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

அதனால் சில ஆண்டுகளாக (குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளுக்குள் என்று தான் சொல்ல வேண்டும்), சொற்பமே இருக்கும் செவ்விந்தியரின் வம்சாவழியினரும், சில அமெரிக்க நகரங்களும், மேற்கிந்திய தீவு நாடுகளில் சிலவும், கொலம்பஸ் தினத்தை வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாட்களில் செவ்விந்தியர் தினமாக கொண்டாடுகிறது.

கொலம்பஸிடமிருந்து பதவி எற்று கொண்டவனும் அவன் பின் வந்தவர்களும் கூட லேசு பட்டவர்கள் கிடையாது. செவ்விந்தியர்களிடம் கொலம்பஸுக்கும் மேலே கொடூரமாக தான் நடந்து கொண்டார்கள்.

புதிய உலகத்தை அப்போதைய போப் அப்போதைய சூப்பர் பவராக இருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லுக்கு பிரித்து கொடுத்து உத்தரவிட்டார். அதன்படி இன்றைய பிரேசில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போர்ச்சுகல்லுக்கும், கொலம்பஸ் கண்டறிந்த பகுதிகள் மற்றும் அதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஸ்பெயினுக்கும் என முடிவானது. அதனால் அன்றைய சூப்பர் பவர்களுக்குள் புதிய உலகத்தால் கொஞ்சகாலத்திற்கு சண்டை வராமல் சமாதானமாக இருந்தது.

இவ்விரு நாடுகள் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளும் பல தடவை பயணம் செய்து ஒட்டு மொத்த வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தங்களின் காலனியாக அறிவித்தது. இதில் ப்ரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா குறிப்பிட தக்க அளவு பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தது.

[ரஷ்யா தான் ஆக்கிரமித்து வைத்திருந்த அலாஸ்காவை சொற்ப காசுக்கு அமெரிக்காவிற்கு விற்ற கதை பின்னால் நடந்தது. இன்றைக்கு வட மற்றும் தென் அமெரிக்காவில் பல நாடுகள் உள்ளன. ஆனால அவை பிரிவதற்கு முன் ஒட்டு மொத்தமாக இரு கண்டங்களாக இருந்த போது, அந்த நிலபரப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல விதமான போர்கள் நடந்தேறியது. இவற்றை பற்றி தனி தொடர் எழுதலாம், அதுவும் பேராசையால் இரத்தமும் உயிரும் இழந்த கதைகள் தான். நேரமும் வரவேற்பும் இருந்தால், இத்தொடரை தொடர்ந்து அந்த கதையை எழுதுகிறேன்].

கொலம்பஸ் காலத்திற்க்கு பிறகு நடந்த கொடூரங்கள் வரும் வாரங்களில்....

No comments:

Post a Comment