Sunday, December 24, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 5

கிடைத்த அடிமைகளை பிடித்துக்கொண்டு, முதல் முறை காலடி பதித்த தீவிற்கு வந்து பார்த்த போது தான் அவர்கள் கட்டி வைத்திருந்த சிறிய கோட்டையான லா நேவிடாட்(La Navidad), தரைமட்டமாக்கப் பட்டுக்கிடந்தது அம்பலமானது. அதில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேரும் காணவில்லை.

அந்த 39 பேரும் செவ்விந்திய பெண்களை தங்களின் அடிமைகளாக பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ் தரமாக நடத்தியதின் விளைவாக சர்ச்சை ஏற்பட்டு, அதனால் உண்டான போரில் கொல்லப்பட்டது கொலம்பஸின் குழுவிற்கு பின்னாளில் தான் தெரிந்தது.

கிடைத்த அடிமைகள் மற்றும், 1200 வீரர்கள் அனைவரும் துரிதமாக செயல் பட்டு, தரைமட்டமாக்கப்பட்ட கோட்டைக்கு பதிலாக புதிதாக ஒரு கோட்டையை சற்று பெரியதாகவே கட்டினார்கள். இம்முறை காலனி அமைப்பதும் ஒரு நோக்கமாக இருந்தபடியால், 12 கப்பல்களிலும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களையும் கொஞ்சம் கொண்டுவந்திருந்தார்கள். அதனால் கட்டுமான பணிகள் மல மலவென நடைப்பெற்றது. ஒரு தேவாலயம், கொலம்பஸ் ஆட்சி செய்வதற்கான அலுவலகம், வீரர்கள் தங்க அறைகள் என பல விஷயங்கள் உள்ளடக்கி இருந்தது அந்த கோட்டை. அக்கோட்டைக்கு, பயணத்திற்கு அனுமதி கொடுத்து பண உதவியும் செய்த ஸ்பெயின் ராணியின் நினைவாக லா இஸபெல்லா(La Isabella) என பெயரிடப்பட்டது. அந்த புதிய கோட்டையில் கொலம்பஸ் அட்மிரல் ஜெனரலாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு தன் ஆட்சியை தொடங்கினான். ஆட்சியை தொடங்கினான் என்பதைக்காட்டிலும், தங்க வேட்டைக்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்தான் என தான் கூறவேண்டும்.

கோட்டை அமைத்து செட்டில் ஆனவுடன், ஆரம்பித்த முதல் வேலை தங்கச்சுரங்கம் தோண்டியது. தோண்டும் வேலை செவ்விந்தியர்களுடையது எனவும், அவர்களை கண்காணிக்கும் வேலை ஸ்பானிய வீரர்களுடையது எனவும் சரி சமமாக பிரித்துக்கொண்டார்கள். பதினான்கு வயதை தொட்ட ஒவ்வொரு செவ்விந்திய ஆணும் கட்டாயமாக சுரங்கப்பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கும். எவ்வளவு உழைத்த போதும் கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகக்குறைவாக இருந்தது. இதனால், செவ்விந்தியர்கள் சரியாக உழைக்காமல் தங்களை ஏமாற்றுகிறார்கள் என நினைத்து கொலம்பஸ் ஒரு ஆணையிட்டான்.

அதாவது ஒவ்வொரு முன்று மாதத்திற்கும், சுரங்க பணியாளர்கள்(அடிமைகள்) ஒவ்வொருவரும் தங்கள் கணக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் தயாரிக்க போதுமான தாதுவை ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அப்படி கொடுப்பவர்களுக்கு பரிசாக ஒரு பித்தளை காசு கிடைக்கும், அதை அவர்கள் தங்களின் கழுத்தில் அடையாளமாக அணிந்து கொள்ளலாம். பித்தளை காசு கிடைத்து, கழுத்தில் போட்டுக்கொண்டவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு நிம்மதி, தொடர்ந்து பணி செய்யலாம்.

சரி, ஆனால் இப்படி குறிப்பிட்ட அளவு தாதுவை ஒப்படைக்காதவர்களுக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லையா என்கிறீர்களா?

ஏன் இல்லை? பரிசு கிடைத்தது, அவர்களும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள அரசு கொடுத்த பரிசு, அவர்களின் துண்டிக்கப்பட்ட கைகள். ஆம், நீங்கள் படிப்பது உண்மைதான். குறிப்பிட்ட அளவு தாது கொடுக்க முடியாதவர்களின் கைகளை முழங்கை வரை வெட்டி அவர்களின் கழுத்திலேயே மாலையாக அணிவித்தார்கள்.

மேற்படி தண்டனையை மேற்பார்வைப்பார்த்து, தவறாமல் நிறைவேற்றியது கொலம்பஸின் சொந்த தம்பிகள். வெட்டு பட்ட கைகளுக்கு மருத்துவமும் கிடையாது. வெட்டு பட்ட கைகளிலிருந்து, இரத்தம் வெளியேறி இறந்தவர்கள் நிறைய பேர்.

இந்த தண்டனைக்கு பயந்து, மலைகளில் ஓடி ஒழிந்தவர்களின் முடிவு இதைவிட கொடூரமானது. தப்பியவர்களை பிடிக்க வேட்டை நாய்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய்கள் சாதாரணமானவை அல்ல, மனிதனின் ஒவ்வொரு இணைப்பையும் கடித்தே பிரித்து விடும் சக்தி வாய்ந்தது. அவைகளை, எதிர்த்து போராடவும் முடியாது, அவற்றின் பாதுகாப்பிற்காக, அதன் உடல் முழுதும், இரும்பினால் ஆன கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. வேட்டை நாயிடம் மாட்டி கதை முடிந்தவர்களின் உடலும் அந்நாய்களுக்கே சொந்தம். அவற்றின் இரையாக!!!

உயிருடன் இருக்கும் ஆண்களின் ஒரே கடமை சுரங்களில் தங்கத்தாதுவை சேகரிப்பது மட்டும் தான், அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கெடு. அம்மக்களுக்கு ஊசலாடும் கத்தி எப்போதும் தலை மீது தொங்கிக்கொண்டே இருந்தது. தங்கள் குடும்பத்திற்காக உழைக்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது, வேட்டையாட முடியாது அனைத்தும் பெண்களே செய்து, தங்கள் கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இதற்கிடையே வீரர்களின் இச்சைக்கும் பலியாக வேண்டும்.

அப்போதய கத்தோலிய கிருத்துவ மத போதனைப்படி, ஒரு கிருத்துவர் மற்றொரு கிருத்துவரை அடிமையாக பயன்படுத்தக்கூடாது. மத நம்பிக்கை கொண்ட கொலம்பஸ் இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வைக் கண்டுபிடித்தான். செவ்விந்தியர்களை மதம் மாற்ற பாதிரியார்களை அழைத்து வந்திருந்தாலும், அவர்களுக்கு ஞானஸ்தானம் செய்விக்காமல் பார்த்துக்கொண்டான். இதனால் மொத்த மக்கள் தொகையையும் அடிமைகளாக பயன்படுத்திக் கொள்ளலாமே!

தங்க தாது நிறைய கிடைக்காத மண்ணில், இக்கொள்ளையர்களின் ஆசைக்காக தங்கத்தாதுவை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றால் எப்படி?

செவ்விந்திய ஆண்களின் முடிவு மூன்று வகையில் முடிந்தது. ஒன்று, தாது கிடைக்காமல் கைகள் வெட்டப்பட்டு இரத்தம் இழந்து உண்டானது ஒரு வகை, இரண்டாவது வகை, வேட்டை நாய்களால் கடி பட்டு கொடுரமுறையில் இறப்பது. அத்தேடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு இரையாகவும் ஆனது.

சிலர் இவ்விரு வகை கொடுமைகளுக்கு பயந்து மற்றொரு வகையை தேர்ந்தெடுத்தார்கள். அது தற்கொலை. ஆம் மாஸ் சூசைட் எனப்படும் முறையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.

இவையனைத்தும் கொலம்பஸின் தங்க மோகத்தால் உண்டான ஒரே ஒரு சட்டத்தத்தினால்!!!

கொடுமைகள் தொடரும்...

No comments:

Post a Comment