Saturday, December 2, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 2

கொலம்பஸ் முதலில் காலடி பதித்த இடம், இன்றைய West Indies என அழைக்கப்படும் Haiti, Domini Republic மற்றும் Bahamas தீவுகள் தான். அந்த தீவுகளை இந்தியாவின் பகுதி என நினைத்தார்கள் அப்பயணக்குழு. அதனால் தான் அத்தீவுகள் west Indies ஆனது. (விவ்வியன் ரிச்சர்ட், ப்ரைன் லாரா, போன்ற கருப்பினத்தவர்களின் மூதாதையர்கள் அங்கே வந்து வாழம் காரணத்தை ஒரு தனித்தொடராக எழுதலாம்) மேற்கத்தைய உலகைப் பொறுத்தவரை நாமெல்லாம் இன்றளவும் East Indians தான்.

கொலம்பஸ் மேற்கொண்ட நான்கு பயணத்திலும், மெயின் லேண்ட் எனப்படும், வட அமெரிக்காவையோ அல்லது தென் அமெரிக்காவையோ தொட்டதில்லை. மேற்கிந்திய தீவுகள், கியூபா, மற்றும் சில மத்திய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கரையை மட்டும் தான்.

முதலில் அவன் எதிர் கொண்ட மக்கள், அரவாக், டைனோ மற்றும் லூக்கயன்(Arwaks, Tainos and Lycayans) இனத்தவர்கள் தான். இவர்கள் அன்பான, பழக இனிமையானவர்கள். புதிய மனிதர்களைக் கண்டதும், தங்களிடம் இருந்த பழங்கள், பருத்தி மூட்டைகள், கிளிகளைக் பரிசாக கொடுத்து வரவேற்றார்கள். அவர்களுக்கு பதிலாக கொலம்பஸூம் அவன் ஆட்களும் தந்த பரிசு, அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, அதை ஸ்பெயின் நாட்டின் காலனிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக அறிவித்து, அதன் கவர்னராக தன்னை அறிவித்துக்கொண்டது தான்.

தங்களின் காதுகளில் தங்க ஆபரணங்களை அணிந்திருந்த அரவாக் இனத்தவர் சிலரை, அந்த புதிய உலகத்தைப்பற்றியும், தங்கம் மற்றும் மற்ற விலைமதிப்புள்ள பொருட்களைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆயுத பலத்தை கொண்டு வழுகட்டாயமாக அடிமைகளாக்கினார்கள்.

“செவ்விந்தியர்கள், கட்டுடல் கொண்ட சிறந்த தோற்றம் கொண்டவர்கள், அவர்களிடமிருந்தவற்றை தானாக முன்வந்து, எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள், அவர்களுக்கு ஆயுதங்களைப்பற்றி எதுவும் தெரியவில்லை, தெரிந்ததெல்லாம் வெறும் அம்பு மட்டும் தான், அதிலும் இருப்பு இல்லை, மூங்கில் போன்ற மரத்தால் ஆனது. எங்களின் இரும்பு வாளைக்கூட பிடிக்கத் தெரியாமல், கூர்மையான பகுதியை தொட்டுத் தூக்கி கைகளில் காயம் பட்டுக்கொண்டார்கள். அவர்கள், மிக சிறந்த வேலைக்காரர்களுக்கான தகுதிகளை பெற்றிருந்தார்கள். அதனால் தான், 50 பேர் கொண்ட எங்கள் குழுவினால், அவர்களை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைக்க முடிந்தது.” இப்படி ஆரம்பத்தில் குறிப்பிட்ட கொலம்பஸ், இரண்டாம் பயணத்திற்க்கு பின் ஐரோப்பியர்களின் படை பலத்தை அதிகரித்துக் கொண்ட பின்பு, “செவ்விந்தியர்கள் மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள், தங்களிடம் மாட்டியவரின் இரத்தத்தை குடிக்கும் நாய்களை போன்ற மூக்கை உடையவர்கள்" என்று குறிப்பிடுகிறான்.

முதல் பயணத்தில் அழைத்து வந்த 39 பேரை விட்டு விட்டு, ஓரளவிற்க்கு கிடைத்த தங்கத்தையும், 500 செவ்விந்தியர்களை பிடித்துக்கொண்டு, ஸ்பெயின் புறப்பட்டான், “புதிய உலகத்தில் இது போன்ற, நம் சொல்படி கேட்கின்ற அடிமைகள் ஆயிரக்கணக்கில் கிடைப்பார்கள்" என் ஸ்பெயின் மன்னருக்கும், ராணிக்கும் காட்டி தன் அடுத்த பயணத்தை உறுதி செய்து கொண்டான்.

இரண்டாம் பயணத்தில், 1200 க்கும் மேற்பட்ட படை வீரகளையும், ஆயுதங்களையும், குதிரைகளையும் கொண்டுவந்து இறக்கினான். விட்டு சென்ற 39 பேரும் இறந்து விட்ட செய்தி கேட்டு, செவ்விந்தியர்களின் மீது கொலை வெறி தாக்குதலை தொடங்கினார்கள்.

ஒவ்வொரு கிராமமாக சென்று, கூடாரங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவர்களை கொத்து கொத்தாக வெட்டிக்கொன்றார்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், கர்பிணி பெண்கள் என் எந்த பாகுபாடும் காட்டவில்லை. கர்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து வளரும் சிசுவை தூக்கி எறிந்தார்கள். ஆயுதம் ஏதும் இன்றி செவ்விந்தியர்களால் எந்தவித எதிர்ப்பும் காட்டமுடியவில்லை. அதையும் மீறி எதிர்த்தவர்களை கும்பளாக பொதுவிடத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்றார்கள். கொதிக்கும் மிகப்பெரிய பாத்திரங்களில், குழந்தைகளை தூக்கி போட்டு வருங்கால சந்ததியை அழித்தார்கள்.

இவையெல்லாம், செவ்விந்தியர்களை வைத்து அடிமைகள் வியாபாரம் செய்து கொண்டிருந்த கொலம்பஸின் படையிலிருந்த ஒருவன், பின்நாளில், பாதிரியாராக மாறிய பின் எழுதிய குறிப்பில் இருப்பவை. இதை எழுதும் போது, என்கைகள் நடுங்குகிறது, அவ்வளவு அரக்கத்தனம் அரங்கேரியது அன்று என குமுறுகிறார். மேலும் குறிப்பிடும் போது,

வீரர்கள், பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையின் கால்களை பிடித்து, தாயின் மார்பிலிருந்து பிரித்து, தலையை பாறைகளில் மோதி கொன்று ஆற்றில் தூக்கி எறிந்தார்கள்.

தங்களின் வாள்களின் கூர்மையை சோதிக்க வேண்டி, பலரை துடிதுடிக்க வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். ஒரே வெட்டில், செவ்விந்தியரின் உடலை இரண்டாக வேண்டும் என தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டு, அதை நடத்தியும் காட்டினார்கள்.

பொழுது போக்கிற்க்காக, கிளிகளை வைத்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கிளிகளை பிடுங்கிக்கொண்டு, அவர்களின் தலைகளை துண்டித்து இருக்கிறார்கள், இதற்கு அவர்கள் கொடுத்த காரணம், “Just for fun”.

இவையல்லாமல், அவ்வினப் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடுமைகள் கட்டுக்கடங்காதவை. ஒரு கிராமத்திற்க்கு சென்று, மொத்த கூடாரத்தையும் அழிக்கும் முன், அந்த கூட்டத்தில் உள்ள அழகிய பெண்களை, தனியாக பிரித்து விரர்கள் தங்களின் அறைகளில் அடைத்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்திக்கொண்டார்கள். 9 வயது தாண்டிய எந்த பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இதனால், 9 மற்றும் 10 வயது மதிக்க தக்க சிறு பெண் குழந்தைகளை அடிமையாக்கி கொள்ள வீரர்களுக்குள் போட்டா போட்டி அதிகபடியாக இருந்தது.

அடங்க மறுத்தவர்கள், தேவை தீர்ந்த பின் வேட்டை நாய்களுக்கு உணவாக அளிக்கப்பட்டார்கள்.

"வீரர்களால் பிடிபட்ட ஒரு பெண்ணை கொலம்பஸின் பரிசாக, படகில் உள்ள என் அறையில் எனக்காக நிர்வாணமாக அனுப்பி வைத்தார்கள். அவளிடம் என் விருப்பத்தை வெளிப்படுத்த, அவள் அதற்கு சம்மதிக்காமல், தன் நகங்களைக் கொண்டு போராடி, எதிர்ப்பு தெரிவித்தாள். கோபம் கொண்ட நான் சாட்டை எடுத்து விலாசிய விலாசில், நான் இதுவரை கேட்டிராத மரண ஓலத்தை எழுப்பி அடங்கிப்போனாள். அதன் பின்பு அவள் என்னிடம் ஒரு தேர்ந்த விபச்சாரி போல் சிறப்பாக நடந்து கொண்டாள்.” கொலம்பஸின் நண்பரான Michele De Cuneo, மேலே குறிப்பிடும் சம்பவம் ஒரு உதாரணம்.

இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க, தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தங்களையும் மாய்த்துக்கொண்டார்கள். இக்கொடுமைக்கு அஞ்சி மாஸ் சூசைட் மூலமும் பல கிராமங்கள் காலியானது.

அத்தீவில்(Haiti), 1492-ல் 250,000 ஆக இருந்த செவ்விந்தியரின் மக்கள் தொகை முதல் இரண்டு ஆண்டுகளில், பாதியாகவும், 1515-ல் 50,000 ஆக மாறியது. 1550-ல் வெறும் 500 ஆக மாறிய அந்த எண்ணிக்கை, 1650 மொத்தமாக அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இப்படி பலவாறாக, கொன்று குவித்து இனத்தை அழித்து விட்டு, அம்மை நோய் தாக்கி இறந்து விட்டதாக இக்கால குழந்தைகளுக்கு பள்ளி பாடங்களில் வரலாறு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது மேற்கத்திய உலகம்.

தங்கம் தேடிப்போன கொலம்பஸுக்கு தங்கம் கிடைத்ததா? எவ்வளவு கிடைத்தது. அதற்கு, அவர்கள் மேற்கொண்ட அழிச்சாட்டங்கள் என்னன்ன? அவனை இந்த வேட்டைக்கு யார் அனுப்பினார்கள்? வாருங்கள் பார்க்கலாம் வரும் வாரங்களில்...

No comments:

Post a Comment