Sunday, December 17, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 4

செவிந்தியர்கள் சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வட அமெரிக்காவும், ஆசியாவும் இணைந்திருந்த நிலப்பரப்பான Bering Strait வழியாக அமெரிக்க கண்டத்திற்குள் கால்நடையாக நுழைந்திருக்கலாம் என வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். Bering Strait இப்போது ரஷ்யாவுக்கும் அலாஸ்காவிற்கும் இடைபட்ட சீற்றம் கொண்ட கடல் பகுதியாக உள்ளது.

ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே, வட அமெரிக்காவில் ஆரம்பித்து, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரை பரவி இருந்தார்கள். வருடத்தின் பெரும்பகுதி பனியில் மூடிக்கிடக்கும் கனடா, பாலைவனம் போன்ற நியூ மெக்சிகோ, மத்திய அமெரிக்க சமவெளிகள், ப்ளோரிடா மற்றும் அதனை சுற்றி இருந்த அழகிய தீவுகள், அமேசான் காடுகள் என அந்தந்த நிலபரப்பு மற்றும் சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொண்டு பல குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள்.

இன்றைய மெக்ஸிகோவின் மயன்(Mayan) இனத்தவரும், பெரு நாட்டின், இன்கா(Inca) இனத்தவரும் உன்னதமான நாகரிக வளர்ச்சி கண்டவர்கள். மத்திய அமெரிக்காவில் உள்ள பிரமீடுகளும், மயன் கோவில்களும், Machu Picchu (எந்திரன் கிளிமாஞ்சாரோ பாடல் Location) மலை நகரமும் இதற்கு சான்றுகள். உலகின் அதிகம் உற்பத்தியாகும் தானியத்தில் முதன்மையாக விளங்கும் மக்கா சோளத்தை (Corn) 7000 வருடங்களுக்கு முன்னமே காட்டுப் புற்களின் குருத்திலிருந்து படிபடியாக மேம்படுத்தி இன்றைக்கு நாம் உண்ணும் மக்கா சோளத்தினை உருவாக்கியவர்கள். உருளைகிழங்கை பல வருடங்களுக்கு பதப்படுத்தும் முறையை அறிந்து வைத்திருந்தார்கள்.

அளவற்ற இயற்கை வளம். எல்லோருக்கும் தேவைக்கு அதிகமாக எல்லாம் கிடைத்ததால், பஞ்சம் இல்லை, திருட்டு இல்லை, போலீஸ் இல்லை, நீதிபதியும் இல்லை. நிலப்பரப்பில் மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வியலிலும் அது ஒரு சொர்க்க பூமியாக விளங்கியது. நேர்மையின்மை என்பதே அவர்களின் அகராதியில் இல்லை என கொலம்பஸே குறிப்பிட்டுள்ளான்.

இரும்பினாலான கை, கால் விலங்கை காட்டி, இதைத்தான் எங்கள் நாட்டின் இராஜா இராணி அணிந்து கொள்வார்கள் எனக்கூறி, அவர்களின் தலைவனை நம்பவைத்து, சந்தேஷமாக அணிந்து கொள்ள சம்மதித்தவனை, விலங்கு பூட்டி சிறைப்பிடித்து கப்பலேற்றி அடிமையாக ஸ்பெயினுக்கு அனுப்பி இருக்கிறார்கள். செவ்விந்தியரின் வெள்ளேந்தித்தனத்திற்கும், ஐரோப்பியரின் நம்பிக்கை துரோகத்திற்க்கும் இதை விட ஒரு உதாரணம் இருக்கமுடியாது.

ஸ்பானியர்களை தொடர்ந்து வந்த அத்தனை ஐரோப்பியரும் இதைப்போன்ற துரோகத்தை தான் செய்து கொண்டிருந்ததால் ஸ்பானியர்கள் எனக் குறிப்பிடாமல், மொத்தமாக ஐரோப்பியர்கள் என்கிறேன். நம்நாட்டிலேயே, கோவாவை போர்ச்சுகீஸியரும், பாண்டிச்சேரியை பிரஞ்சுக்களும், மொத்த இந்தியாவை பிரிட்டிஷ் காரர்களும் பிடிக்க வில்லையா?

ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து ஐரோப்பா கொண்டுவரப்பட்டு, கருப்பினத்தவரை ஆடுமாடுகளை போல தெரு சந்தைகளில் விலை பேசும் அடிமை வியாபாரம் சர்வசாதாரணமாக நடந்து வந்த காலம் அது.

இந்தியாவிற்கு கடல் வழி கிடைக்கவில்லையென்றாலும், புதிய சொர்க்கபூமி கிடைத்திருக்கிறது. அங்கே அளவற்ற இயற்கை வளங்கள் மட்டும் இன்றி, நிறைய அடிமைகளும் கிடைப்பார்கள் எனக்கூறிய கொலம்பஸின் வாதத்தில் ஸ்பெயின் அரசுக்கு நாட்டமில்லை. காரணம் கப்பலில் ஸ்பெயினுக்கு வரும் வழியிலேயே பல செவ்விந்திய கைதிகள் இறந்து விடுவார்கள். புதிய உலகில் மூலம் கிடைக்கும் அத்துனை வருமானத்திலும் பத்து சதவீதம் மட்டும் தனக்கென்றும், மீதமுள்ள 90 சதவீதம் அரசுக்கு எனவும் கொலம்பஸின் ஆசை வார்த்தை பலிக்க ஆரம்பித்தது. தங்கள் இராஜியத்தின் எல்லைகளை அதிகப்படுத்தவும், பூலோக சொர்கத்தின் வளங்களை கொள்ளையடிக்கவும் எண்ணி, இரண்டாம் பயண திட்டத்தை ஒருவழியாக ஏற்றுக் கொண்டது ஸ்பெயின் அரசு. இம்முறையும் பயண செலவுகளுக்காக தங்கள் நாட்டின் ஜூஸ் (Jews) மதத்தவரின் சொத்துகளை அபகரித்தது.

கொலம்பஸ் சொன்னபடி ஒப்பந்தம் தயார் ஆனது, ஒப்பந்தத்தில் செவ்விந்தியரை கிருத்துவர்களாக மாற்றுவது என்பது ஒரு சரத்து மட்டுமே, மற்றபடி முழு ஒப்பந்ததில் பாதிக்கு மேல் கிடைக்கப்போகும் தங்கத்தை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதைப் பற்றித்தான் எழுதப்பட்டிருந்தது.

இம்முறை மூன்று படகுகள் இல்லை, 17 கப்பல்கள், 1200க்கும் மேற்பட்ட படை வீரர்கள், முக்கியமாக குதிரை மீதிருந்து, ஈட்டியால் தாக்கி அழிக்கும் பயிற்சி பெற்றவர்கள், மதம் மாற்ற 6 பாதிரியார்கள், எண்ணற்ற மனித மாமிசம் தின்னும் வேட்டை நாய்கள். அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண்கூட இல்லை. பின்னாளில் அத்தீவுகளில் செவ்விந்திய பெண்களிடம் அறங்கேறிய பாலியல் வெறியாட்டத்திற்கு கொலம்பஸின் இம்மாதிரியான கொள்கைதான் முழு முதற்க் காரணம்.

வேட்டையாட மர அம்புகளை வைத்திருக்கும்; புதியவர்களை அன்போடு உபசரிக்கும் அப்பாவிகளிடம் 'தங்கம் எங்கே?' எனக்கேட்கத்தான் மேலே சொன்ன இந்தனை படைகளும்.

இம்முறை வேறு தீவில் இறங்கிய அந்த கூட்டம், கண்ணில் பட்டவர்களை பிடித்து கைதியாக்கி கப்பலுக்குள் ஏற்றினார்கள். சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்களை கைது செய்து, 'இனி நீங்கள் அடிமைகள், எங்கள் சொல்படித்தான் கேட்க வேண்டும்' என்ற ஐரோப்பியர்களின் கட்டளை அவர்களுக்கு விளங்கவில்லை. பிடிபட்டவர்களுக்கு அவர்கள் அடிமைகள் என்பதை உணர்துவதே ஐரோப்பியருக்கு கடினமான வேலையாக இருந்தது. ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்தில் முன் அனுபவம் கொண்ட கொலம்பஸுக்கே இது சவாலாக இருந்தது. கைதிகள் மிக மிக முரண்டு பிடித்தார்கள்.

இந்த பிரச்சனையை சமாளிக்க தனி ஆளாக பிடிக்காமல் அவர்களை குடும்பத்தோடு அடிமைகளாக பிடிக்க ஆரம்பித்தார்கள். இந்த அணுகுமுறை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது. அடிமைகளும் நிறைய பேர் தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். முதல் நாளே 6 பேரை பிடித்து கப்பலுக்கு அடிமைகளாக கொண்டுவந்தவர்கள், அவர்களை தேடி வந்த 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளையும் பிடித்து கைது செய்து கப்பலில் ஏற்றினார்கள். கப்பலையே பார்த்திராத அவர்கள், வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு வந்தவர்களையும் கப்பலை சுற்றிக்காட்டுவதாக கூறி கைதியாக்கினார்கள்.

கைதியாக பிடிக்கும் போது, வாளால் குத்து பட்டு குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்த ஒருவனை எப்படியும் பிழைக்க வைக்க முடியாது என உணர்ந்து, கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அவன் ஒரு கையால் குடலை பிடித்துக்கொண்டு, மறுகையால் நீந்தி கொண்டு கரை சேர, அவன் தப்பித்தால் இவர்களின் உண்மை தெரிந்து விடும் என எண்ணி அவனை மீண்டும் கப்பலுக்கு பிடித்து வந்து கை கால்களை கட்டி, இம்முறை கப்பலின் மேல்தளத்திலிருந்து கடலில் தூக்கி போட, அந்நிலையிலும் அவன் தத்தளித்து கரை நோக்கி நீந்த, வெறுத்து போன படை வீரர்கள் நீந்திக்கொண்டிருந்தவனை கப்பலில் இருந்த படியே சுட்டுக் கொன்ற பின் தான் நிம்மதியடைந்தார்கள்
தொடரும்...

No comments:

Post a Comment